tamilnadu

img

ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பிலிருந்த 2 அதிமுக நிர்வாகிகள் கைது  

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.  

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் ரூ 3 கோடி வரை பெற்றுள்ளார். மேலும் வேலையும் வாங்கி தராமலும், பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியதாக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றம் சாட்டினர். அதன்பிறகு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் புகார் அளித்ததின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.        

இதனை அடுத்து கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.

அதனைதொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி தான் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் விதமாகவும், விமான நிலையங்களுக்கு காவல்துறை தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டு உதவி செய்ததாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில்,திருப்பத்தூர் அடுத்த அக்கரகாரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகிய 2 பேரை இன்று காலை திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையிலான திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் அவரிடம் தொடர்பில் இருந்த அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.