திருநெல்வேலி, மார்ச் 9- முன்விரோதத்தில் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு நெல்லை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது தென்காசி மாவட்டம் கரி வலம்வந்தநல்லூர் அருகே உள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அவருடைய மகன் முத்துகுமார் (வயது 31). தொழி லாளி. இவர் கடந்த 18–2–2015 அன்று கேரளாவுக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்றார்.அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராமகிருஷ்ணன் இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முத்துக்குமார் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இந்த நிலையில் திருவேங்கடம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதில், அவர் முத்துக்குமார் என்ப தும், கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்தது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சுப்புலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த மரியதாஸ் மகன் முருகேசன் (வயது 37), வீராணபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராமர் மகன் முத்துக்குமரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முத்துக்குமரன் கடந்த 6–9–2016 அன்று இறந்தார். இந்த வழக்கு நெல்லை 4–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்து முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.