திருநெல்வேலி, ஜூலை 25- தென்காசி மாவட்டம் கடையம் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இடத்தில் அணைக்கரை முத்து என்ற விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து மறைந்த அணைக்கரையின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அணைக்கரை முத்துவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மூன்றாவது நாளாக உடலை வாங்காமல் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே கடையம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.