புதுக்கோட்டை, செப்.16- தனது வாழ்நாள் முழுவதும் மரம் வளர்பதற்காகவே பாடுபட்ட மரம் தங்கச்சாமி நினைவாக அவரது நினைவு நாளில் அவரது அபிமானிகள் மாநிலம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை வளர்க்க இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தில் வாழ்ந்து மறைந்தவர் விவசாயி தங்கசாமி. ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பள்ளிகள், பொது இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் பொது இடங்களிலும், பள்ளி, அலுவலக வளாகங்களிலும், பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அதே போல மறைந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினம், மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினம், சுற்றுச்சூழல் தினம், என்று ஒவ்வொரு முக்கிய தினங்களிலும் தன் வீட்டுத் தோட்டத்திலும், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார். மேலும், அவர் கலந்து கொள்ளும் திருமணம், காதணி விழா, மற்றும் பள்ளி, அரசு அலுவலக விழாக்களின் விழா தொடங்கும் முன்பு மரக்கன்றுகளை நட்டு தொடங்குவதும் அனைவருக்கும் மரக்கன்றுகளையே பரிசாக வழங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
தன் வீட்டிற்கு யார் வந்தாலும் அவரது வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்று நட வைப்பது வழக்கம். தனது திருமண நாளில் மரக்கன்று நடத் தொடங்கி கடந்த ஆண்டு அவர் மறையும் வரை மரக்கன்றுகளை நடவுசெய்துகொண்டே இருந்தார். கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு இணைந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வுப் பயணங்களை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தங்கசாமியை பற்றி தெரிந்தவர்கள் அவரது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தங்கள் வீடுகளின் மரக்கன்றுகளை நட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பேருந்து நிலையம், அலுவலகங்கள், பள்ளிகளில் மரக்கன்றுகளை இளைஞர்கள் வழங்கினார்கள். மேலும் கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் தாங்கள் சீரமைத்த நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டனர். பேராவூரணி கைஃபா குழுவினர் பல இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்கள். இப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறும் போது.. மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மரம் தங்கசாமி. அவர் சொன்ன கருத்து தற்பொழுது அதிக தேவையாக இருப்பதால் இளைஞர்கள் அந்தப் பணியை முன்னெடுத்து செய்து வருகிறோம். கஜா புயல் அழித்த மரங்களையும் விரைவில் மீட்டெடுப்போம் என்றனர்.