திருநெல்வேலி, ஜூன் 2-நெல்லை மாவட்டம் ஆலங்குளத் தில் குடிநீர் குழாய்களில் சமீப நாட்களாக கலங்கலான குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆலங்குளத்தில் 4 நாட்களுக்கு ஒருமுறை ஆற்று குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இதற்காக மாதாந்திர குடிநீர் கட்டணம் இணைப்பு ஒன்றுக்கு ரூபாய் 110 பேரூராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5 வார்டில் ஆற்று தண்ணீர் சேறும் சகதியும் கலந்த நீராக குடிநீர் குழாய்களில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள்சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சுகாதாரம் இல்லாத குடிநீரால் தொற்றுநோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.