tamilnadu

img

பேரளம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்

குடவாசல், செப்.6- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பேரளம் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து எருமை மாட்டிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்றது. நகரப் பகுதியில் குப்பைகள் குவிந்து உள்ளன. பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிவறை பகுதியில் கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் இடமாக உள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும். பேரளம் கடை வீதி, பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்ற எருமை மாட்டிடம் மனுக் கொடுக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.ஜெயசீலன் தலைமை தாங்கினார். தலைவர் வரத.வசந்தபாலன், பொருளாளர் சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் வரத.வசந்தராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் தியாகு.ரஜினி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், எஸ்.ராஜேந்திரன், பி.ராஜா பி.ஸ்டாலின், சி.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.