tamilnadu

தஞ்சாவூர் ,தூத்துக்குடி முக்கிய செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு  சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர் ஜூலை.14- சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி 2012 ஆம் ஆண்டு மார்ச்சில் தொகுப்பூதிய அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தொகுப்பூதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். பணியமர்த்தப்பட்ட போது ரூ.5ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாகவும், பின்னர் சம்பள உயர்வாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ.2ஆயிரமும், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டில் 700 ரூபாய் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியாலும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டது. இதனால் தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய 3 மாதத்துக்குள் குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படும் என்று 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டசபையில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பணி நிரந்தர அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.  இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது, பணி நிரந்தரம் காலதாமதம் ஆகி வருவதால் அதுவரை குறைந்தபட்சமாக ரூ.15ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும்.  10 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வு, அதனுடன் 7 ஆவது ஊதியக்குழு 30 சதவீத ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்கினால் எங்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதற்கு தனியே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படாது. சம்பள உயர்விற்கு கூடுதல் நிதி செலவு ஏற்படாமலே 4 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஒதுக்கும் நிதியினை 16 ஆயிரத்து 549 பேரில் எஞ்சி இருக்கும் 12 ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே போதும். பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன் மற்றும் எதிர்கால வாழ்வாதாரம் மேம்பட இத்தருணத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் சம்பள உயர்வையாவது அறிவித்திட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது என்றார். 

ஆய்வுக்குப் பின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும் : அமைச்சர் தகவல்

தூத்துக்குடி, ஜூலை 14- திருச்செந்தூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வுக்குப் பிறகு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார். இதுகுறித்து திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திருச்செந்தூர் மற்றும் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தி ருந்தார். அதன் அடிப்படையில், தற்போது சென்னை நெமிலியில் இத்திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல, திருச்செந்தூர் அருகே ஆலந்தலையிலும் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி யின் தொழில் தேவையை பூர்த்தி செய்யவே முள்ளக்காடு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.634 கோடியில் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.