தரங்கம்பாடி ஜூன் 14- நாகை மாவட்டம் பொறையார் அருகே காழியப்பநல்லூர் கிராமத்திலுள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை வேறு கோவிலின் பெயருக்கு அதிகாரிகள் மாற்றி விட்டதாகவும், 70 ஆண்டுக்கும் மேலாக அந்த இடத்தில் குடியிருக்கும் கிராமமக்கள் வெள்ளியன்று நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் மனு அளித்தனர். காழியப்பநல்லூர் கிராமத்தில் உள்ள சோழிஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 70 ஆண்டு வாழ்ந்து கொண்டும், நிலங்களில் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு கணினி சிட்டா எடுத்தப் போது சோழிஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் அருகேயுள்ள கிராம கோவிலான பிடாரியம்மன் கோயிலின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் வெள்ளியன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் மனு அளித்தனர். கோயில் நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினரால் நடந்துள்ள முறைகேடுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சோழிஸ்வரர் கோயில் பெயரில் இருந்த நிலங்களை மீண்டும் அதே பெயரில் மாற்றுவதோடு, தாங்கள் குடியிருக்கும் இடத்தில் அவரவர் பெயரில் மனைப் பட்டாக்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஏராளமான ஏழைகள் குடியிருக்க இடமின்றி தவிக்கும் நிலையில் கோயில் பெயரில் பல ஏக்கர் நிலங்கள் மாற்றப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது