தஞ்சாவூர், மே 26-தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சாவூர் வட்ட மூன்றாவது மாநாடு, மே 25, ஞாயிறு அன்று தஞ்சாவூர், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.மாநாட்டிற்கு வட்டத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சி. அப்பாண்டைராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் இரா. தமிழ்மணி துவக்கவுரை நிகழ்த்தினார். செயலாளர் த. சுத்தானந்தன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வி.ஜி. ராஜாராமன் சங்கத்தின் நிதிநிதி அறிக்கையையும் தாக்கல் செய்தார்கள். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். எஸ். பாலசுப்பிரமணியன் தலைவராகவும், த.சுத்தானந்தன் செயலாளராகவும். வி.ஜி. ராஜாராமன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் துணைத் தலைவர்களாக ப. துரைராஜ், ந,தட்சிணாமூர்த்தி, அர் பரமசிவம் ஆகியவர்களும், இணைச் செயலாளர்களாக எஸ். கலைவாணன், எம். ராமலிங்கம், யு. சரஸ்வதி ஆகியவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக செல்வரஜ், சி.இளங்கோ, எம். தண்டாயுதபாணி, கோவிந்தராஜ், ராஜரத்தினம் ஆகியவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். மாநாட்டை வாழ்த்தி, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். கலியமூர்த்தி, எஸ். விஜயராகவன் உரையாற்றினார்கள்.
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அனைவருக்கும் அமல்படுத்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால் ஊதியம் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழங்க வேண்டிய 20 மாத ஊதியத் தொகையை அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்கிடு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்திடு, அதனை இலவசத் திட்டமாக அமல்படுத்திடு, காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்தைப் பாதுகாத்திடு, ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடு ஆகிய தீர்மானங்களை ப. துரைராஜ் மற்றும் வி. கிருபளானி முன்மொழிய, பிரதிநிதிகள் கரவொலிமூலம் அவற்றை நிறைவேற்றினார்கள்.பின்னர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி. புருசோத்தமன் நிறைவுரை நிகழ்த்தினார். ப.துரைராஜ் நன்றி கூறினார். (ந.நி.)