தஞ்சாவூர், ஜூன் 22 - தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் நிர்வாகிகள், திராவிடர் கழகம், மதிமுக ஆகியவற்றின் மாணவர் இயக்க நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கும்பகோணம் நகரச் செயலாளர் தமிழழகன் கண்டன உரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.கே.பாஸ்கர், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் முத்துராமலிங்கம், மணிவண்ணன் மற்றும் மாவட்ட மாநகர- ஒன்றிய- நகர- கழக மாணவர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.