கரூர், நவ.15- இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56 ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் ஊழியர்- மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பிருந்து துவங்கி கிருஷ்ணாபுரம், கரூர் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், க.பரமத்தி பேருந்து நிறுத்தம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஒன்றிய தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் எம்.சுப்பிரமணியன், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, செல்வராணி, வெங்கடாசலம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.