திருநெல்வேலி, மே 28-வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வள்ளியூர் நீதிமன்றம்உத்தரவிட்டது. நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் கடந்த 2017-ம்ஆண்டு ஆய்வாளராக பணியாற்றியவர் ஸ்டீபன் ஜோஸ். இவர் அந்த ஆண்டுஜூலை மாதம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, பணகுடியை சேர்ந்த வழக்கறிஞர் சரவணனை காவல் நிலையத்துக்கு அழைத்தார். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.இதையடுத்து ஸ்டீபன் ஜோஸ், வழக்கறிஞர் சரவணனின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி மற்றும் 2 வயதுகுழந்தையை இரவு நேரத்தில் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. மேலும் காவல்ஆய்வாளரை பாராட்டியும், வக்கீல்கள்குறித்து அவதூறாக சித்தரித்தும் பணகுடி பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், ஸ்டீபன் ஜோஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ரூ.10 லட்சம் மான நஷ்டஈடு கேட்டும்வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, ஸ்டீபன் ஜோசுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜராகவில்லை. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து ஸ்டீபன் ஜோசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி காமராஜ் உத்தரவிட்டார்.தற்போது ஸ்டீபன் ஜோஸ் மதுரையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.