tamilnadu

img

மண் திருடும் நபர்கள் மீது நடவடிக்கை புதுக்கோட்டை ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 5 - குடிமராமத்து பணிகளை சாக்காக வைத்து மண் திருடும் நபர்கள் மீதும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனை க்காடு கிராமத்தில் குடிமராமத்துப் பணியை வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளுக்காக 66 ஏரி, குளங்கள் சீரமைக்கும் பணிகள் ரூ.20 கோடியே 27 லட்சத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேற்பனைக்காடு பெரியகுளம் ஏரி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கரைகளை பலப்படுத்துவதுடன் வரத்து வாய்க்கால்களை சீரமைப்பது, மடைகள் சீரமைப்பது போன்ற பணிகளை ஆயக்கட்டுதாரர்களே செய்கிறார்கள். சில கிராமங்களில் விவசாயிகள் பலனடைவதற்காக என்று குளங்களில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதை பயன்படுத்தி மண் கொள்ளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சொந்த செலவில் நீர்நிலைகளை சீரமைக்கும் நிலையில் வரத்துவாரி கரைகளை உடைத்து மண் திருடப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கேள்விக்கு, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்களின் கரைகளை உடைத்து மண் திருடுபவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.