tamilnadu

வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்

முசிறி, ஆக.23- திருச்சி மாவட்டம் முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆய்வாளர் ரவிசக்ரவர்த்தி முன்னிலை வகித்தார். திருமண மண்டபங்கள், வணிக வளாக உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் திருமண மண்டபங்கள், ஹாஸ்டல், மருத்துவமனைகள், மக்கள் அங்காடி, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 15 தினங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா குறைந்தபட்சம் 300 ச.மீ பரப்பளவை கண்காணிக்கும் வகையில் கேமராவின் திறன் இருக்க வேண்டும். அரசு உத்தரவினை பின்பற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தாத பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.