tamilnadu

img

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர், ஆக.26- தங்களுக்கு சொந்தமான வீட்டை மீட்டுத் தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி(30). இவரது கணவர் வேல்முருகன் கடந்த 4 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குழந்தைகள் ராஜ முருகன்(9), ஷோபனா(11), மாமியார் நாகம்மாள்(80) ஆகியோருடன் வசித்து வருகிறார்.  மேலும் இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டை கிருஷ்ணமூர்த்தி என்ப வருக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன் வாடகைக்கு விட்டாராம். இந்நிலையில் தனலட்சுமி வாடகைக்கு இருந்த கிருஷ்ண மூர்த்தியிடம் வீட்டை காலி செய்து கொடுக்குமாறு கூறியதற்கு அந்த வீடு தனக்கு சொந்தமானது எனக் கூறி காலி செய்ய மறுத்து பிரச்னையில் ஈடுபட்டு வருகிறாராம். இதுகுறித்து கை.களத்தூர் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைதொடர்ந்து கடந்த ஆக.23-ம் தேதி வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டுக்கு குழந்தைகள் மற்றும் சில தளவாடப் பொருள்களுடன் சென்று தனலட்சுமி குடியேறியுள்ளார். வீட்டிலிருந்த கிருஷ்ணமூர்த்தி தளவாடப் பொருள்களை எடுத்து வெளியே வீசி விட்டு, தனலட்சுமியையும், அவரது குழந்தைகளையும் தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றினாராம். இதுகுறித்தும் கை.களத்தூர் காவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  இதனால் விரக்தியடைந்த தனலட்சுமி, தனது குழந்தைகள் ஷோபனா, ராஜமுருகன், மாமியார் நாகம்மாள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அங்கு, தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்கள் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.