tamilnadu

img

தற்காலிக மாற்றுப்பாலம் அமைத்திட வலியுறுத்தல்

தஞ்சாவூர் ஆக.23- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், நெய்வாசல் பஞ்சாயத்து க்குட்பட்ட அரசப்பட்டு கிராமத்தில் ஊசி க்கண் பாலம் உள்ளது. இந்தப் பாலம் வடவாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. வடவாற்றின் ஒருபகுதி மன்னார்குடி தாலுகா பேரையூர் வழியாகவும், மற்றொரு பகுதி வடுவூர் எரிக்கும் சென்று கலக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வடவாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட, தரை மட்டப்பாலம் தற்போது வலுவிழந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது.  இந்நிலையில், குறுகலான இந்தப் பாலத்தை இடித்து விட்டு, புதிய உயர்மட்டப் பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பழைய பாலத்தை உடைத்து விட்டு, நபார்டு மூலம் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பாலத்தின் வழியாகவே சென்று வந்தனர். முக்கிய சந்திப்பான அம்மாபேட்டை, அருந்தவபுரம் செல்லவும் இந்தப் பாதையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், தற்போது பாலம் உடைக்கப்பட்ட நிலையில், மாற்று வழி ஏற்பாடு இல்லாததால் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ் குமார் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், அரசப்பட்டு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் அந்த இடத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தனர். பின்னர் என்.சுரேஷ்குமார் கூறுகையில், "நெய்வாசல், கீழத்தெரு, மேலத்தெரு, வடக்கு நத்தம், அரசப்பட்டு, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், மாற்றுப்பாலம் அமைக்கப்படாத நிலையில் வெகுதொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக மாற்றுப்பாலம் அமைத்து தர வேண்டும்" என வலியுறுத்தினார்.