tamilnadu

img

கிராமங்களுக்கு தொலைதொடர்பு வசதியை ஏற்படுத்துக எஸ்.செந்தில்குமார் எம்.பி., மத்திய அமைச்சரிடம் மனு

தருமபுரி, பிப்.8- தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், 12 இடங்களில் தொலைத்தொடர்பு வசதியை உறுதிப்படுத்தும் வகையில், பிஎஸ்என்எல் கோபுரங்களை அமைத்து வேண்டுமென  மத்திய அமைச்சர் ரவிசங்கரிடம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை மனு அளித்தார்.  இம்மனுவில் கூறியிருப்பதாவது,  தருமபுரி மாவட்டத்தில்  உள்ள கிராமங்களில் போதுமான தொலைத்தொடர்பு வசதி இல்லை. கரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஜிட்டாண்டா ஹள்ளி,ஜக்கசமுத்திரம், பிக்கன ஹள்ளி, அண்ணாமலை ஹள்ளி ஆகிய கிராமங்களிலும், பென்னாகரம் வட்டம் பெருமாபலை, சித்திரபட்டி, செல்லாமுடி, எரியூர் கிராம பகுதியும், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் வாச்சாத்தி, கலசபாடி, அரசநத்தம், தொல்தூக்கி ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவன டவர்கள்  இல்லை.  இதனால்  மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில், இந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கான தொலைத்தொடர்பு சேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. மேற்கண்ட பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 6,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசிக்கின்றன. அவர்களுக்குரிய, தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. மிகவும் ஆபத்தான மற்றும் அவசரமான நேரங்களில், ஆம்புலன்ஸ் வசதியைக் கேட்டுப் பெறுவதற்குக்கூட, தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தற்போது 5 ஜி அலைக்கற்றை எனும் அதிநவீன வசதியைநோக்கி நாட்டு மக்கள்  சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், தருமபுரி தொகுதியில் மக்கள், தங்களுக்கான, அடிப்படை தொலைத்தொடர்பு வசதியை பெறுவதில்கூட சிக்கல் நிலவுகிறது. இதற்கு தீர்வு காணும்பொருட்டு, இக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் அனைத்திலும், உடனடியாக, போதுமான எண்ணிக்கையில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கோபுரங்களை உடனடியாக அமைத்து தர மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.   மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் எம்.பி.,யிடம் உறுதியளித்தார்.