tamilnadu

img

காவிரி உபரிநீரை நீர்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிடுக!

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீரை நீர்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

  கர்நாடகாவில் பெய்த மழையினால் இவ்வாண்டும் தினசரி 1.25 லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டு  வீணாக கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. காவிரியில் மழைக்காலங்களில் ஓடும் உபரி நீரை நீரேற்றம் மூலம் கொண்டு வந்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (21.07.2022) தர்மபுரி மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்த மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்கள், இத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தருமபுரி மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் அறிவிப்பை சிபிஐ (எம்) மாநிலக்குழு வரவேற்பதுடன், உடனடியாக ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையின் நீரை நீரேற்றம் மூலம் மொரப்பூர், கடத்தூர் பகுதி ஏரிகளில் நிரப்ப தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமெனவும், அதுபோல் மாவட்டத்தில் ஓடும் சின்னாறு, வேப்படி ஆறு உள்ளிட்ட சிற்றாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டுமெனவும், தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செனாக்கல் அணைக்கட்டு திட்டத்தையும் நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் சிபிஎம் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.