விழுப்புரம், ஜூன் 14- விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் கால மானார். அவருக்கு வயது 69. விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் பிறந்த ராதாமணி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக சார்பில் 2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் இருந்த ராதாமணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி
உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே ராதாமணியின் உயிர் பிரிந்தது. இதனிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ராதாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரையும் சிந்திக்கவைக்கும் வகையில் பேசக்கூடியவர் ராதாமணி என புகழாரம் சூட்டினார். மறைந்த ராதாமணிக்கு திருமணமாகவில்லை. அவருக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளன. மறைந்த எம்எல்ஏ ராதாமணியின் இறுதி ஊர்வலம் சனிக்கிழமை (ஜூன் 14) மாலை 5 மணியள வில் அவரது சொந்த ஊரான கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் நடைபெற உள்ளது.