சென்னை, ஜூலை 7 - சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. தீக்கதிர் செய்தி எதிரொலியாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ‘சென்னை மாநகராட்சியில் துப்புரவு, களப்பணியாளர்கள் 1000 பேருக்கு கொரோனா’ என்ற தலைப்பில் ஜூலை 3 அன்றும், ‘சென்னை மாநகராட்சியில் எத்தனை ஊழியர்களுக்கு கொரோனா? உண்மையை மறைக்கும் ஆணையர்’ எனும் தலைப்பில் ஜூலை 6 அன்றும் செய்தி பிரசுரிக்கப் பட்டது. அந்த செய்திகளில், கொரோனா பாதிக்கப்பட்ட நிரந்தரம் அல்லாத தொழிலாளர்கள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. அரசு அளிக்கும் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
இதன் எதிரொலியாக ஜூலை 6 அன்று சென்னை மாநகராட்சியில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, அனைத்து வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தொற்றுக்குள்ளாகி காலமான நிரந்தர அலுவலர்கள், பணியாளர்கள், தற்காலிக தினக்கூலி பணியாளர்கள், ராம்கே பணியாளர்கள் மற்றும் தன்ஆர்வலர்கள் விவரங்கள் உடனடியாக 7.7.20 காலை 11 மணிக்குள் மண்டல அலுவலரின் சான்றொப்பமுடன் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கை யுடன் அனுப்பப்பட்டுள்ள படிவத்தில் பணியாளர் எண், பெயர், பதவி, துறை, மண்டலம், பகுதி, கோட்டம், வயது, பாலினம், ஆய்வகத்தின்பெயர், தொற்று உறுதி செய்யப்பட்ட நாள், தற்போது சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை விவரம்-நாள் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணத்தை தொகை 2 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது என்றும் அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வட்டார துணை ஆணையர்கள் மற்றும் 15 மண்டல அலுவலர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், இறந்தோர் விவரங்களை பிரிவு வாரியாக சேகரித்து மாநகராட்சி தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளனர்.