திருப்பெரும்புதூர்,மே 20-திருப்பெரும்பதூர் அடுத்த மண்ணூரில்செயல்பட்டு வரும் சோவல் தொழிற்சாலையில் இயந்திரங்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் மற்றும்அவர்களுக்கு ஆதரவாக நின்ற சிஐடியு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும் புதூர் அடுத்த மண்ணூர் கிராமத்தில் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு உதிரிபாகம் தயாரித்து தரும் ‘சோவல் இந்தியா’ தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இத்தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். சோவல் தொழிற்சாலை யில் உதிரிப்பாகம் தயாரிக்கப் பயன்படும்இயந்திரங்களை ஹவாசின் என்ற நிறு வனம் வழங்கி வந்தது. ஹவாசின் நிறுவனத்திற்கு இந்த வகையில சோவல்நிர்வாகம் ரூ.40 கோடி வழங்க வேண்டி யிருந்தது. ஆனால் அந்த பணத்தை சோவல் நிர்வாகம் வழங்காததால் ஹவாசின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற அனுமதியுடன் கடந்த மாதம் சோவல் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை எடுத்துச் செல்ல முயன்றது.
இயந்திரங்களை எடுத்துச் சென்றால் தொழிலாளர்களின் வேலை பறிபோகும் என்பதை உணர்ந்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மற்றும் தொழிலாளர்கள் ஹவாசின் நிர்வாகி களிடம் பேச்சுநடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு கடந்த ஞாயிறு (மே 19) வரை தொழிற்சாலை இயங்கிவந்தது.இந்நிலையில் ஞாயிறன்று (மே 19) மாலை காஞ்சிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுடன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் குழுவினர் ஹவாசின் நிறுவன ஆட்களுடன் சோவல் இந்தியா தொழிற்சாலைக்குள் நுழைந்தனர். தொழிற்சாலைக்குள் இருந்த தொழிலாளர்களுடன் பேசினர். அப்போது, இயந்திரங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தி னர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தால் அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.
சிஐடியு தலைவர்கள் கைது
தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் தொழிலாளர்களை கைது செய்யக் கூடாது எனத்தடுத்தனர். உடனே அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து திங்களன்று (மே 20) காலை சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமாரை மட்டும் வழக்குப் பதிவு செய்து காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர். மதியம் இரண்டுமணியளவில் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த தொழிலாளர் களையும் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணனையும் விடுவித்தனர். சிஐடியு தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஏ.வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.சவுந்தரராசன் எச்சரிக்கை
கைது செய்யப்பட்ட தொழிலாளர்களையும் காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமாரையும் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் நேரில்சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.சவுந்தரராசன் கூறியதாவது:“காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படக்கூடிய பன்னாட்டு கார் தொழிற்சாலைகளுக்கு உதிரிப் பாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் திடீரென மூடுவதும் வேலையில் உள்ள தொழிலாளர்களை நடுத் தெருவில் விட்டுவிட்டு ஓடிவிடுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் முடியதற்கு பிறகு இது அதிகரித்துள்ளது.
ஓட்டம் பிடித்த முதலாளி
டாங்சன் என்ற தொழிற்சாலையை திடீரென மூடிவிட்டு அதில் உள்ள இயந்திரங்களைக் கொண்டுச் சென்று அவர்களது வேறு தொழிற்சாலையில் வைத்து இயக்கி வருகின்றனர். பழைய தொழிலாளர்கள் வீதியில் நிற்கின்றனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.சோவல் தொழிற்சாலையின் முதலாளி ரூ.30 கோடிக்கு மேல் கடன் வைத்து விட்டு ஓடிவிட்டார். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தரமான உற்பத்தியை நாங்கள் தரத் தயார் என்று கடந்த ஒரு வாரமாக அதைதொழிலாளர்கள் செய்து காட்டினர். அதையும் மீறி உயர்நீதிமன்ற உத்தரவு எனக் கூறி ஞாயிறன்று இரவு காவல் துறை உதவியுடன் அங்குள்ள இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டனர்.இதனால் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோய்விட்டது. எங்களது வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் கொடுங்கள் என தொழிலாளர்கள் கேட்டதற்கு அனைவரையும் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.சோவல் தொழிற்சங்கத்தின் தலைவரும் சிஐடியு மாவட்டச் செயலாளருமான இ.முத்துக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எங்களது கோரிக்கை தொழிலாளர்களுக்கு வேலை கொடுங்கள் என்பது மட்டும்தான். வேலை கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் சொல்ல வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
பொய்வழக்குகளை திரும்பப்பெறுக!
105 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவேண்டியது நீதிமன்றத்தின் அடிப்படை பொறுப்பு. இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும். கொண்டு சென்ற இயந்திரங்களை மீண்டும் அதே இடத்தில் வைத்து அதே தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். எங்கள் சங்கமே தரமான உற்பத்தியை உருவாக்கித் தரதயாராக இருக்கின்றோம். அரசும் தொழிலாளர் நலத்துறையும் இதில் தலையிட வேண்டும். இதர தொழிலாளர்களும் எப்போது வேலை போகும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர். வேலையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு .சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கையும் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சங்கர், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சிஐடியு தலைவர்கள் எஸ்.கண்ணன், இ.முத்துக்குமார் ஆகியோரை கைது செய்து கொண்டு செல்லும் போலீசார். (வலது) காஞ்சிபுரத்தில் திங்களன்று நடைபெற்ற கண்டன இயக்கம்.