tamilnadu

img

நேர்மை, பொறுப்புணர்வுடன்  தமிழக அரசு செயல்பட வேண்டும் கொரோனோ கண்காணிப்புக்குழு வேண்டுகோள் 


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நேர்மையோடும், பொறுப்புணர்வோடும் தமிழக அரசு செயல்படவேண்டுமென கொரோனோ கண்காணிப்புக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கொரோனோ விழிப்பு கண்காணிப்புக்குழு சார்பில் பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், த.செ.கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்ஷெரீப், இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், அப்துல் சமது, பெரியார் சரவணன், சுப  உதயகுமாரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
"கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் ஆரம்பகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைளில் மத்திய, மாநில அரசுகள் தவறிழைத்துவிட்ட நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு புதுதில்லி ஹஜ்த் நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் மையம் தான் காரணம் என்ற அவதூறு குற்றஞ்சாட்டி, குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் கட்டமைக்கப்படுவது  கடும் கண்டனத்திற்குரியது.

சீனாவில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு மரண ஓலங்கள் ஒலித்தபோது, அப்போதே இந்தியாவில்  செய்திருக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்டுவிட்டு, அதை மூடிமறைக்க ஒரு சமூகத்தின் மீது கை காட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட முன்னரும், அதன் பின்னரும்  வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுமையும் அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மீறி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தலைமையில் நடைபெற்ற அயோத்தியா சம்மந்தமான கூட்டம், மத்தியப்பிரதேசத்தில் பாஜகவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் புதிய அரசு கொண்டாட்ட கூட்டம், தமிழகத்தில் நடந்த ஈஷா யோகா மைய கூட்டம் ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு,  இஸ்லாமியர்களின் தப்லீக் கூட்டம் சம்மந்தமாக விவாதிப்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது திட்டமிட்ட வெறுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியே ஆகும். இந்த மோசமான பாரபட்ச செயல் வெட்கித் தலைக்குனியக்கூடிய ஒன்றாகும்.

சீனாவில் மிகப்பெரும் பாதிப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்திய நிலையில், ஜனவரி 30-ஆம் தேதி  உலக சுகாதார நிறுவனம் கொரோனாவின் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்தது. ஆனால், அந்த அறிக்கையை இந்திய அரசு உதாசீனம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதுடன், மோடி-ட்ரம்ப் சந்திப்பு நிகழ்வுக்காக மிகப்பெரும்  மக்கள் திரள் நிகழ்வையும் நடத்தியது.  அரசின் ஒத்துழைப்புடன் கூடிய எண்ணற்ற நிகழ்வுகள் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட பிறகு இந்தியாவில் நடந்துள்ளது. 

வெளிநாட்டினர் கலந்துகொண்ட தப்லிக் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வந்திருக்காது என்பதோ அல்லது வராது என்பதோ அல்லது  அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்றோ கூறவில்லை. மாறாக தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால் மட்டுமே கொரோனோ பரவுகிறது போன்ற தேவையற்ற பிம்பத்தை, வெறுப்பு பிரச்சாரத்தை எப்போதும் கையாளும் இந்துத்துவ சக்திகளும், சில ஊடகங்களும் ஏற்படுத்த முனைவதையும், அந்த வெறுப்பு பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தாமல் குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளில் அடையாளப்படுத்தும் தமிழக அரசின் போக்கும் கண்டிக்கத்தக்கது.

ஒரு வைரஸ் தொற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் இணைத்து வெறுப்பை   விதைப்பது  ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. இத்தகைய இரண்டாந்தர பிரச்சாரங்களை தடுத்து நிறுத்திவிட்டு, நேர்மையோடும், பொறுப்புணர்வோடும் மத்திய-மாநில அரசுகள் நடந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளம் மற்றும் சில ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் இதுதொடர்பான வெறுப்புப் பிரச்சாரங்களை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக ஒன்றுபட்ட அனைவரும் ஒருங்கிணைந்த யுத்தத்தை மேற்கொள்ளவதே நிரந்தரத் தீர்வை தரும். கொரோனாவை கொண்டு மேற்கொள்ளப்படும் வெறுப்பு பிரச்சாரங்கள் சமூகத்தில் மிகப்பெரும் அமைதியின்மையை உருவாக்கிவிடும் என்பதை கவனத்தில்கொண்டு  செயலாற்ற வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.