tamilnadu

img

குடிநீரின்றி தவிக்கும் சந்திரபாடி கிராம மக்கள்... தாகம் தீர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள சந்திரபாடியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாள்தோறும் குடிநீரின்றி தவிக் கின்றனர்.

கடலோர மீனவ கிராமமான சந்திரபாடிஊராட்சியில் சின்னூர்பேட்டை கிராமத்தையும் சேர்த்து 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மீன் பிடித்தொழில் மட்டுமே பிரதான தொழிலாக உள்ள இக்கிராமத்தில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அன்றாட குடிநீர் தேவை முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம்பெரும்பாலான கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுவதைப் போலவே சந்திரபாடி கிராமத்திற்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வாரத்தில் 3 நாட்களில் 1 மணி நேரத்திற்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கடந்த 10 நாட்கள் தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் நாள்தோறும் தெரு குழாய்களை சுற்றி குடங்களை அடுக்கி வைத்து, ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி, அருகிலுள்ள பகுதி
களிலிருந்து சிலர் 1 குடம் 7 ரூபாய் என குடிநீரை வாகனங்களில் வந்து விற்பனை செய்வதும் நாள்தோறும் நடக்கிறது. அன்றாடம் குடிநீருக்காக மட்டுமே அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், வேலையின்றி ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதே நிலை நீடித்தால் கடல் நீரைத்தான்,குடிநீராக பருக வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உடனடியாக குடிநீர் வடிகால் வாரியம் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என சந்திரபாடி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். குடிநீருக்காக அன்றாடம் குடங்களுடன் காத்திருக்கும் சந்திரபாடி கிராம மக்களின் தேவை தீர்க்கப்படுமா?