தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
சென்னை, மே 15-மேல்நிலைக் கல்வி மொழிப்பாடத்தில் இரண்டு தாள்கள் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரா.சோ.மோகனா, பொதுச் செயலாளர் அ.அமலராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையிலும் இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்களை நேர்பட முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் தமிழ் நாட்டின் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரி வந்தது. அவ்வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முழு ஒத்துழைப்பை நல்கி வந்தது. புதிய பாடநூல்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அதன் ஆரோக்கியமான மதிப்பீட்டையும் முன் வைத்தது. பாடச் சுமையையும் சுட்டிக் காட்டியது.தற்போது பாடச் சுமையை குறைக்க இரண்டு விதமான நடைமுறைகளை முன்னெடுக்க தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை பரிந்துரைகளை பெற்று இருப்பதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக அறியப் பெறுகிறோம். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாட சுமையைக் குறைக்க மொழிப் பாடம் ஏதேனும் ஒன்றைக் குறைப்பது; மற்றொன்று, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்களில் தற்போது பின்பற்றப்படும் தேர்வு முறையை மாற்றி அமைத்தல் என்பவையாகும். 21ஆம் நூற்றாண்டு சவால்களை சந்திக்கத் தக்க வகையிலும் அரசியல் சாசனத்தின் விழுமியங்களை ஒட்டியும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படாமல் நீட் மற்றும் மத்திய அரசின் உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளுக்குத் தக்கவாறு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டது என்ற விமர்சனங்களுக்கு பொருள் சேர்க்கும் வகையிலேயே பாடத்திட்ட மாற்றம் ஏற்பட்டது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
எனவே பாடச்சுமைக்கும் மொழிப் பாடங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை எல்லோரும் நன்கு அறிவர். ஏனெனில் மொழிப் பாடத்திட்டத்தின் மதிப்பெண்கள் எந்தவித உயர் கல்வி சேர்க்கைக்கும் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அவ்வாறு இருக்க மத்திய பாடத்திட்ட வாரியம் போல ஐந்து பாடங்கள் உள்ளதாக மாநில பாடத்திட்டத்தை மையப்படுத்துதல் அன்றி மேல்நிலைக் கல்வி மொழிப் பாடக் குறைப்புக்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது. எனவே இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்குழு கோருகிறது. அதேபோல் மொழிப் பாட தேர்வு முறையில் இரண்டு தேர்வுத் தாள்கள் முறை உள்ளது. மொழி ஆளுமை இலக்கணம் ஆகியவற்றில் தரம் குறைந்து வருவதைக் கண்கூடாக காணலாம். இவ்விரண்டும் மேம்படவும் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படவும் மொழிப் பாடங்களில் இரண்டாம் தாள் நீடிப்பது மட்டுமல்ல; அதனை வலுப்படுத்திடவும் வேண்டும். அதன் வழி மாணவர்களின் மொழி நுட்பம் மேம்பட வகை செய்ய வேண்டும். இது விசயத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு இரண்டு தாள்கள் முறையை கைவிட்டு ஒரு தாள் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது. இதனைக் கைவிட்டு மீண்டும் இரண்டு தாள் முறையை அதற்குரிய புரிதலோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.