மக்சேசே விருது பெற்றவரும், இந்தியா மற்றும் உலக அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும் விவசாயத்துறையில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளருமான சாய்நாத் அவர்களுடன் இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவுகின்ற கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து 2019 ஜூன் 06 அன்று இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு:
கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் 60 கோடி இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான குடிநீர் கிடைக்கா மல் இரண்டு லட்சம் இந்தியர்கள் இறந்து போகின்றனர் என்று தகவல்கள் தரப்படுகின்றன. 21 இந்திய நகரங்கள் அடுத்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தவிக்கப் போகின் றன என்று நிதி ஆயோக் கூறுகிறது. நமது கொள்கை முடிவுகள் இந்த பாதையிலேயே சென்று கொண்டு இருக்கு மென்றால், இந்த எண்ணிக்கை மேலும் மோசமடையும். எனவே இந்த எண்களை நாம் அங்கீகரிப்பதை விட, இப்படி யொரு இக்கட்டான நிலைமைக்கு ஏன் நாம் வந்து சேர்ந்தோம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். மிகப்பெரும் தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும் தீவிரமான பிரச்சனைகள்தான். அவை உண்மையில் பெரும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. ஏழை மக்களி டமிருந்து அதிக சலுகை பெற்றிருக்கும் மக்களுக்கு, விளிம்பு நிலையில் வாழ்பவர்களிடமிருந்து மிகவும் வசதியான நிலையில் வாழ்பவர்களுக்கு தண்ணீரை அன்றாடம் இடம் மாற்றுவதாலேயே இந்த மாபெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஐந்து வகையான தண்ணீர் இடமாற்றங்கள் இத்தகைய தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்குகின்றன. அன்றாடம் நடக்கின்ற இந்த இடமாற்றங்கள் பின்வாசல் வழியாக தண்ணீரை தனியார்மயமாக்குவதற்குத் துணை நிற்கின்றன.
முதல் வகையான இடமாற்றம் என்பது விவசாயத்திலி ருந்து தொழில்துறைக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வதாக இருக்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை எடுத்துக் கொள் ளுங்கள். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி 14 பேர் இறந்தனர். இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் 1000 லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு பெற்றுக் கொண்டது. ஆனால் அந்த ஸ்டெர்லைட்டைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்த பெண்கள் 10 ரூபாய் கொடுத்து 25 லிட்டர் தண்ணீரைப் பெறுவதற்காக, தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்காக பிளாஸ்டிக் குடங்களைச் சுமந்து கொண்டு மிக நீண்ட தூரம் நடந்து செல்கின்றனர். நாடெங்கி லும் இவ்வாறான தண்ணீர் இடமாற்றம் நடந்து கொண்டு தானிருக்கிறது. மகாராஷ்டிராவில் 2011ஆம் ஆண்டு பிம்பிரி சின்ச்வாட்டில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பாசன நீரை பாட்டில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்துப் போராடிய 5 அல்லது 6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டது உங்களுடைய நினைவில் இருக்கும். இரண்டாவது வகையான தண்ணீர் இடமாற்றம் என்பது விவசாயத்திற்குள்ளேயே, அதாவது உணவுப் பயிரில் இருந்து பணப் பயிருக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வதாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் என்றைக்கும் தீராத பிரச்ச னையாக இருக்கின்ற விஷயத்திற்கு நாம் இப்போது திரும்பு வோம். கரும்பு பயிர் ஏராளமான தண்ணீரை எடுத்துக் கொள்வதை மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடுவதற்கு 18 மில்லியன் முதல் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது ஏறத்தாழ 12 ஏக்கர் நிலத்தில் கம்பு, சோளம் பயிரி டுவதற்குத் தேவையான தண்ணீரின் அளவாகும்.
400 மடங்கு குடிநீர்
மூன்றாவது வகையான தண்ணீர் இடமாற்றம் என்பது கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புறத்திற்கு தண்ணீர் இடம் மாறுவதாக இருப்பதை நாம் காண வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புறங்களை விட அங்கிருக்கும் நகரங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்பு களுக்கு 400 மடங்கு அதிக குடிநீர் கிடைப்பதாக தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. கிராமப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு தாகம் இருப்பதில்லையா, இல்லை அவர்கள் மிகக் குறைந்த உடல் உழைப்பை செய்பவர்களாக இருக்கிறார்களா அல்லது அவர்களின் உடலில் இருந்து மிகக் குறைவான தண்ணீரே வெளியேறுகிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. எனவே நகர்ப்புற மகாராஷ்டிரா தங்கள் கிராமப்புறங்களை விட 400 சதவீதம் அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறது. அதாவது இங்கே நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கிடையே தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் அதிக இடைவெளி இருக்கிறது. ஆக இந்த தண்ணீர் இட மாற்றம் இந்த இடைவெளிகளை அதிகரிக்கச் செய்கிறது.
25 மடங்கு கட்டணம்
மராத்வாடாவில் 24 பீர் மற்றும் ஆல்கஹால் தொழிற் சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளைக்கு 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த ஏழைப் பெண்களுக்கு தண்ணீர் வழங்குகின்ற அதே அரசாங்கம்தான் அதே தண்ணீரை, லிட்டர் 4 பைசா என்ற விலைக்கு இந்த தொழிற்சாலைகளுக்குத் தந்து கொண்டிருக்கிறது. பம்பாய் உயர்நீதிமன்றம் தடை உத்தர வைப் பிறப்பித்து, ஒரு வருடத்திற்கு இவர்களுக்கு வழங்கப் படும் தண்ணீரின் அளவைப் பாதியாகக் குறைத்து ஒதுக்கீடு செய்தது உங்கள் நினைவில் இருக்கிறதா? அப்படியொரு வறட்சி ஆண்டில்தான் பம்பாய் உயர்நீதிமன்றம் மகாராஷ்டி ராவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான தடையையும் விதித்தது. ஆல்கஹால் தொழிற்சாலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 பைசா செலுத்துகிற வேளையில், அந்த ஏழைப் பெண்கள் இருபத்தைந்து மடங்கு அதிக மாக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு ஒரு ரூபாய் என்ற அளவில் அதாவது 100 பைசா செலுத்துகிறார்கள்.
மாடிகளில் நீச்சல் குளங்கள்
ஐந்தாவது வகை இடமாற்றம் என்பது வாழ்வாதா ரத்திலிருந்து சொகுசு வாழ்க்கை முறைக்கு தண்ணீரை இட மாற்றம் செய்வதாக இருக்கிறது. உதாரணமாக மும்பை யில் போரிவாலி பகுதிக்குச் சென்றால்… மும்பை மட்டுமல்லா மல் புனேயிலும் பெரிய பெரிய வளாகங்கள் கட்டப்படு கின்றன. 30-40 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியும் ஒரு நீச்சல் குளத்துடன் இருப்பதாக அந்த வளாகங்கள் கட்டப்படுகின்றன. என் வார்த்தைகளை நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். செய்தித்தாள்களைப் பிரித்து அதில் வருகின்ற விளம்பரங்களில் உள்ள படங்களைப் பார்த்து நீங்களே அதை அறிந்து கொள்ள முடியும். ஒரே வளாகத்தில் 100 முதல் 150 சிறிய நீச்சல் குளங்கள்கூட இருக்கக் கூடும். அப்படி என்றால் அங்கே உபயோகிக்கப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கும்? இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகின்ற பணியா ளர்கள் யார்? அவர்களிடம் போய் நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள், ஏன் உங்கள் கிராமத்திலேயே நீங்கள் இருக்க வில்லை என்று கேட்டால், விவசாயம் செய்வதற்கான தண்ணீர் கிராமத்தில் எங்கே இருக்கிறது என்று அவர்கள் நம்மிடம் திரும்பக் கேட்கிறார்கள். கிராமத்தில் தண்ணீர் இல்லை என்பதால், விவசாயத்தைக் கைவிட்டு விட்டு அவர்கள் இங்கே வந்து உங்களுக்கும் எனக்கும் நீச்சல் குளம் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை விவசாய நிலத்திலிருந்து கோல்ஃப் மைதானத்திற்கான தண்ணீர் இடமாற்றம் என்றும் சொல்லலாம். கோல்ஃப் விளையாட்டு, வேறெந்த விளையாட்டு நிகழ்வுகளையும் விட மிக அதிகமாக தண்ணீர் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாக இருக்கிறது.
ஆக இந்த ஐந்து வகையான தண்ணீர் இடமாற்றங்கள் ஏழைகளிடமிருந்து வசதி படைத்தவர்களுக்கு தண்ணீரைத் தள்ளி விடுவதை நாம் காண்கிறோம். பின்வாசல் வழியாக தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்த மகாராஷ்டிரா தவிர, சந்திரபூர், நாக்பூர் போன்ற நகரங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் மயத்திற்கு கதவைத் திறந்து விட்டிருக்கின்றன. ஆக இந்தியா வில் ஏழைகளிடமிருந்து பணக்காரர் களுக்கு என்று கீழிருந்து மேல் நோக்கி தண்ணீர் பாய்ந்து கொண்டிருக் கின்றது.
அடிப்படை உரிமையா? வணிகப் பொருளா?
நிலத்தடி நீர் முன்னர் இருந்த அளவிற்கு மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இனிமேல் இல்லை என்ற நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். ஏனெனில் நிலத்தடி நீரை மீட்டெடுப்பதற்கு இனி சாத்தியமில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கண்டடைவதற்குத் தேவையான அடிப்படை கேள்விகளை நாம் கேட்க வேண்டும். பிற வகையான தீர்வுகள் இருக்கவே செய்கின்றன. அதை எவ்வாறு நாம் முடிவு செய்வது? தண்ணீர் என்பது சந்தைப்படுத்தப்படுவது, விற்பனைக்கு உகந்தது, லாபம் தருவது, வணிக ரீதியான பண்டம் என்பதாக முடிவு செய்வதா அல்லது அது மனிதர்களின் அடிப்படை உரிமை, நம்முடன் இந்தப் பூமியைப் பகிர்ந்து கொள்ளும் கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்குமான உரிமை என்பதாக முடிவு செய்வதா? மனிதர்களால் மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்பட வில்லை. தண்ணீர் இல்லாததால் மகாராஷ்டிராவில் கால்நடைகள் இறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேவதை கதைகளில் சொல்லி இருப்பதைப் போன்று பத்து மாடுகள், கொய்யா தோட்டம் வைத்திருக்கும் கிராமப்புற இந்தியாவிலுள்ள ஒருவர் இவற்றில் ஒன்றைத் தேர்ந் தெடுக்க வேண்டி முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மாடுகள், கொய்யா தோட்டம் இரண்டிற்கும் தேவையான அளவு தண்ணீர் இல்லை என்ப தால், அந்த மாடுகளை உயிருடன் காப்பாற்ற முடிவு செய்கிற அவர் தோட்டத்தை அழித்து விடுகிறார். தண்ணீர் என்பதை ஒருவர் தனக்கென்று தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடலாமா என்ற கேள்வி இப்போது எழுகிறது. தண்ணீரைப் பெறுவது அடிப்படை உரிமை என்றாக்கும் போது, பற்றாக்குறை சந்தைக்கான தேவையை நீங்கள் குறைத்து விடுகிறீர்கள். பற்றாக்குறை சந்தைக் கான தேவை குறைந்தாலும், அந்தப் பற்றாக்குறையை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கத்தான் செய் வார்கள். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு தினந்தோறும் தேவையான குறைந்தபட்ச தண்ணீர் கிடைக்கு மென்றால், அது அந்த சந்தையின் மீது பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். மற்றொரு விஷயத்தையும் மறந்து விடக் கூடாது. இந்த பிரச்சனையில் காலநிலை குறித்த பார்வை யும் இருக்கிறது. கிணறுகள் வற்றிப் போகும் போது, அது மண்ணின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிலத்தடி நீரை மீட்டெடுப்பதற்கு எதையும் செய்யாமலேயே நாம் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு செய்வது காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு நமது மண்வளத்தையும் பாதிக்கின்றது.
பாசனத்துக்காக 60 சதவீதம் நிலத்தடி நீர்
இந்தியாவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுத் தொழில் என்பது உலக அளவில் மிகப் பெரியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஈரோடு அருகே உள்ள நகரத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுத் தொழிலின் மூலம், 16 ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநி லத்திலும், யூனியன் பிரதேசத்திலும், ராஜஸ்தானில் இருந்து சிரபுஞ்சி வரைக்கும் உள்ள அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 200 கோடி அடி ஆழத்திற்கு பூமியில் துளையிடப்பட்டு நீர் உறிஞ்சப்படுகிறது. இது போன்ற தொழில் இப்போது பஞ்சாப், குஜராத் போன்ற இடங்க ளிலும் வரத் தொடங்கியிருக்கின்றது. இதுபோன்று நிலத்தடி நீரை வெளியேற்றுவதில் நாம் பித்துப் பிடித்தவர்களாக மாறியிருக்கிறோம். பாசனத்திற்காகப் பயன்படுகின்ற நீரில் ஏறத்தாழ 60 சதவீதம் நீரை நாம் நிலத்தடியில் இருந்தே எடுத்து வருகிறோம். கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன். வறட்சி என்பதை வெறுமனே மழை பற்றாக்குறையால் ஏற்படுகின்ற நிகழ்வாக மட்டுமே காணாதீர்கள். அது ஒருவகை வறட்சி. வானிலை தொடர்பான வறட்சியாக மட்டுமே அது இருக்கிறது. வறட்சி என்பது நீர்வள வறட்சி என்றும், வேளாண் வறட்சி என்றும் 5, 6 வகைகளில் பல்வேறு வடிவங்களில் ஏற்படுகின்றது. இவையனைத்தும் சேர்ந்துதான் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கின்ற இந்த மிகப்பெரும் தண்ணீர் பற்றாக் குறையை உருவாக்கி இருக்கின்றன.
தண்ணீர் பாதுகாப்புச் சட்டம்
உணவை நீங்கள் அடிப்படை உரிமை என்று மாற்றியி ருக்கிறீர்கள். அது போதுமான அளவிற்கு இல்லையெனி னும், இந்த நாடு உணவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வில்லையா? ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை அது மாற்றியிருக்கிறது அல்லவா? நடைமுறையில் அந்தச் சட்டம் மிகவும் மோசமாக இருப்பதாகவே நான் கருது கிறேன். இடைப்பட்ட நிலையில் இருக்கின்ற அது மீண்டும் ஒரு மோசமான நிலைக்கே சென்று விடும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றை இயற்றும் போது ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை அது மாற்றுகிறது அல்லவா? தண்ணீர் பாது காப்பு இல்லாமல் உணவு பாதுகாப்பை பெற முடியாது என்ப தையும் நான் இங்கே கூற விரும்புகிறேன். தண்ணீர் என்பதை அடிப்படை உரிமையாக மாற்றும் போது, இந்த தண்ணீர் வணிகத்தை அதன் லாபத்தை உங்களால் குறைக்க முடியும். அவ்வாறு மாற்றப்படும் போது உங்களால் அந்த வளாகங்களில் இருக்கின்ற 200 நீச்சல் குளங்களை இல்லாமல் செய்து விட முடியும். இது ஒரு மாத காலத்திற்கான நீண்ட பிரச்சாரம். பிரேக்கிங் நியூஸ் என்பதாக வந்து கொண்டிருக்கும் மற்ற பெரிய செய்திகளை மறந்து விடுங்கள். இதுதான் உண்மையான பிரேக்கிங் நியூஸ். இதற்கு முன்பு இல்லாத அளவில் நமது நாடு தண்ணீர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கிறது.
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு