tamilnadu

img

காந்தியை கொன்றவர்களே அவரை சொந்தமாக்க முயற்சிக்கிறார்கள்

பினராயி விஜயன் எச்சரிக்கை

திருவனந்தபுரம், அக். 2- காந்தியை கொன்றவர்களே அவரை சொந்தமாக்கவும், காந்தியின் சொற்களை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  “இது நமது தேசத்தந்தையின் நூற்று ஐம்பதாவது பிறந்தநாள். தனது வாழ்க்கையையே உலகத்திற்கான செய்தியாக தந்த தலைவர். காந்தி உயர்த்திப்பிடித்த மதிப்பீடுகள் நூறாண்டுகள் கடந்தபின்னும் மங்காத ஒளியாக ஜொலிக்கின்றன. அனைத்துப்பகுதி மக்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பதையே அவரது ஒவ்வொரு செயலும் வெளிப்படுத்தியது.   ஆனால், நாட்டை இன்று காந்தியிடமிருந்து பின்னோக்கி இழுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் இம்முறை காந்தி பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தேசத் தந்தையான காந்தியையும் அவரது நோக்கங்களையும் நிலைநாட்டு வோம் என்பதை ஒவ்வொரு இந்தியரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டும்” என்று பினராயி விஜயன் கூறினார்.