tamilnadu

img

சிஐடியு பொன்விழா எழுச்சியுடன் துவங்கியது

புதுதில்லி, மே 31-இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முன்னணிப் படையாம் இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) தனது பொன்விழாவை பேரெழுச்சியுடன் துவக்கியுள்ளது. சிஐடியு பொன்விழாவுடன் இணைந்து இந்தியாவின் முதல் மத்திய தொழிற்சங்கம் உதயமானதன் நூற்றாண்டு விழாவையும் சிஐடியு கொண்டாடுகிறது. சிஐடியு பொன்விழாவின் துவக்கத்தைக் குறிக்கும் விதமாக மே 30 வியாழனன்று மாலை தலைநகர் தில்லியில் சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா தலைமையில் உற்சாகமும் எழுச்சியும் மிக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிஐடியு பொன்விழா 2019 மே 30 அன்று துவங்கி 2020 மே 30 வரை நாடு முழுவதும் பெரும் உற்சாகத்துடனும் பேரெழுச்சியுடனும் கொண்டாடப்படும்; இதையொட்டி நாடு முழுவதும் தொழிலாளர்களின் பல்வேறு வகையான சங்கம நிகழ்வுகள், கருத்தரங்குகள், கலை வடிவங்களில் விரிவான பிரச்சார இயக்கங்கள், போராட்ட எழுச்சிகள் உள்பட எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெறும் என பிரகடனம் செய்தார். துவக்கவிழாவில் சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பங்கேற்று உரையாற்றினார். சிஐடியு முதன்முதலில் உருவாக்கப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற பெருமிதத்துடன் ஏ.கே.பத்மநாபன் உணர்ச்சிமிகு உரையினை ஆற்றினார்.சிஐடியு பொன்விழா துவக்கத்தை வாழ்த்தி அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்.புண்ணியவதி, இந்திய மாணவர் சங்க பொதுச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் சிஐடியுவின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். விழாவின்போது மாமேதை காரல் மார்க்சின் நூல் வெளியீடும் இடம்பெற்றது.முன்னதாக சிஐடியு தலைமையகமான பி.டி.ஆர். பவனில் அகில இந்தியத் தலைவர் ஹேமலதா விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே செங்கொடியை ஏற்றி வைத்தார்.சிஐடியு பொன்விழா துவங்கிய நாளில் நாடு முழுவதும் சிஐடியு மாநிலக்குழுக்கள், மாவட்டக்குழுக்கள், சிஐடியு தலைமையிலான எண்ணற்ற தொழிற்சங்கங்கள் பொன்விழா நிகழ்வுகளை எழுச்சியுடன் துவக்கின.