பாஜகவின் 40 வருட கூட்டணி கட்சியான அகாலிதளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது பஞ்சாப் விவசாயிகளின் ஆவேசத்தை பிரதிபலிக்கிறது. இல்லையெனில், அகாலி தளக் கட்சியின் ஆதரவுத் தளமான ஜாட் இனவிவசாயிகளின் கோபத்தை அக்கட்சி சந்திக்க நேரிடும்.
“விவசாய விரோத சட்டங்கள் மூலம் பஞ்சாப் ஹரியானாவின் மீது தீப்பந்தம் வீசாதீர். பஞ்சாப் தீப்பற்றி எரிந்தால் நாடே தீப்பற்றி எரியும். பசுமைப் புரட்சி காலத்திலிருந்து தேசத்துக்கே பஞ்சாப் உணவளித்து வருகிறது. அந்தப் பஞ்சாப் விவசாயிகளை பழி வாங்காதீர்கள்” என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அகாலி தள உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் உருக்கமாக மோடி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கூர்மையடையும் வர்க்க முரண்பாடு
பாஜக அரசின் இதயம் துடிப்பது கார்ப்பரேட்டுகளுக்காகத்தானே! பாஜக அகாலிதளம் இழப்பைப் பற்றிஅலட்டிக் கொள்ளவில்லை.குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயம்,கொள்முதல் கைவிடப்படும் அச்சத்தால் பஞ்சாப் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், குழுக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.பஞ்சாப் விவசாயம் வித்தியாசமானது. அரசு கொள்முதல் அங்குதான் அதிகமாக நடக்கிறது. பசுமைப்
புரட்சியில் விவசாயம் முடுக்கிவிடப்பட்டது. வேளாண் விளைபொருள்கள் ஒழுங்குமுறை விற்பனை சந்தைகள் ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட அங்கு நன்றாகவே செயல்படுகின்றன. மாநில அரசின் உதவியுடன் குறைந்த பட்ச ஆதார விலையில் அதிகமான அளவில் கோதுமை, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுவரையுள்ள அனைத்து நடைமுறைகளும் ஒழிக்கப்படும் என்பதை உணர்ந்துள்ள பஞ்சாப் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள்,குழுக்கள் ஆதரவுடன் தீவிரமாக போராடிவருகின்றனர். எனினும்,இப் போராட்டத்தில் பணக்கார விவசாயிகளின் சார்பு தெரிகிறது. டிராக்டர் பேரணி,பைக்குகளின் ஊர்வலம்,ஜாட் இன அடையாளம் என போராட்ட வழிமுறை அனைத்து விவசாயிகளின் இயக்கமாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நாசிக்- மும்பை நடைபயணப் போராட்டத்தை இந்த தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.180 கி.மீ.நடைபயணத்தில் விவசாயத் தொழிலாளர்கள்,சிறு-குறு விவசாயிகள்,பழங்குடியினர் என விவசாயம் தொடர்புடைய அனைத்துப் பகுதியைச் சேர்ந்த 50000 பேர் காலுக்குச் செருப்பின்றி கூட கடும் பயணம் மேற்கொண்டனர்.பசுமைப் புரட்சியால் முடுக்கி விடப்பட்ட பஞ்சாப் விவசாய முறை கடந்த 50 ஆண்டுகளில் வர்க்க முரண்பாட்டை கூர்மைப்படுத்தி உள்ளது.தொடர்ச்சியாக குறைந்துவரும் மகசூல்-லாபம்,நிலத்தடி நீர் குறைவு, வளமிழக்கும் மண்வளம் ஆகிய காரணங்களினால் விவசாயத் தொழிலாளர்கள்,தலித் மக்கள், பாரம்பரிய கைவினைஞர் சாதிகள்விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால், பணக்கார விவசாயிகள் சாத்தியமுள்ள இடங்களில் மூன்றுபோக விவசாயம், உயர் தொழில் நுட்ப விவசாயம்,பால் பண்ணைத் தொழில், வேளாண் வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டு விவசாயத்தில் நிலைத்து நிற்கின்றனர்.ஆனால் எளிய விவசாயிகள் துயரின் பிடியில் சிக்கியுள்ளனர்.
தாராளமயத்தின் தொடர்ச்சியே புதிய வேளாண் சட்டங்கள்
இன்று நிறைவேற்றப்பட்டுள்ள மோடி அரசின் புதிய வேளாண் விரோத சட்டங்கள் 30 ஆண்டுகால தொடர்ச்சிதான். ஏற்கனவே தொடர்ந்து வந்த அநீதிகளை அதி தீவிரப்படுத்தியுள்ளது மோடி அரசு. கேரளாவை தவிர்த்து விவசாயத்தில் தனியார் மூலதனத்தை தங்கள் பங்குக்கு மாநில அரசுகள் அதிகரித்தே வந்துள்ளன. எனினும் கார்ப்பரேட்டுகள் உடன் ஒப்பந்த சாகுபடி, குறைந்த பட்ச ஆதாரவிலை, ஒழுங்குமுறை விற்பனைக் குழு, அரசு கொள்முதல், சேமிப்பு, பொதுவிநியோகத் திட்டம் ஆகியவற்றை முற்றாக ஒழிப்பது எனும் விவசாய விரோத உச்சத்துக்கு செல்ல மாநில அரசுகள் துணியாது . பாஜக ஆளும் மாநில அரசுகளை தவிர.
எனவேதான், மாநிலங்கள் இந்த சட்டங்களுக்கு சம்மதிக்காது என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டம்ஏழாவது அட்டவணையின்படி விவசாயம் மாநில அதிகாரங்களின் பட்டியலில் உள்ளபோதும் கூட்டாட்சிக்கு விரோதமாக,சட்டவிரோதமாக வேளாண் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது மோடி அரசு.1991 முதல் தாராளமயக் கொள்கைகள் ஆரம்பம் ஆனது முதலே தனியார் நிறுவனங்கள் வேளாண் வர்த்தகத்தில் செயல்பட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சிக்கு வந்தஅனைத்து அரசுகளும் விவசாயத்தில் தனியாரின் பங்கைஅதிகரித்தே வந்துள்ளன.தேசிய விவசாய கொள்கை 2000 விவசாயத் துறையில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்திடவும், மூலதனம்பெருகிடவும், விளைபொருள்களுக்கு உத்தரவாதமான விலை கிடைத்திடவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த சாகுபடி அல்லது விளைநிலங்களை குத்தகைக்கு விட வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றது. மேலும், இந்திய விவசாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் நெல், கோதுமை உற்பத்தியில் இருந்து ஒப்பந்த சாகுபடி முறையில் பணப்பயிர் விவசாயத்திற்கு மாறியாக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை குழுக்கள் காலத்திற்கு ஒவ்வாது. திறன் அற்றது. அநீதியானது (தனியார் மூலதனத்திற்கு) என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
சிறு- குறு விவசாயிகள்
விவசாயிகளின் போராட்டங்களை கண்டு விவசாயிகளும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர் என்று நம்புவது குழந்தைத் தனமானது. நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ பண்ணை விவசாயிகள் போன்ற உயர் அடுக்கில் உள்ள பணக்கார விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களால் வரக்கூடும். நிலப்பிரபுக்களின் ஆதிக்கமானது நிலங்களின் மீது மட்டுமல்லாமல் கிராமம், அரசியல் வரை விரிவடைகிறது. புதிய வேளாண் சட்டங்களினால் இவர்கள் கார்ப்பரேட்டுகளின் முகவர்களாகி பலன் பெறும் வாய்ப்புகள் உண்டு.
எனவே சிறு குறு விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. பயிர்த்திட்டமிடுதல் இல்லாத நாட்டில் கார்ப்பரேட்டுகள் வசம் இந்திய வேளாண்மையை ஒப்படைப்பது பெரும்பான்மையான விவசாயிகளுக்கு நட்டம், கடன் சுமையை ஏற்படுத்தும். உற்பத்திச் செலவினம் அனைத்தும் சிறு, குறுவிவசாயிகள் மீது சுமத்தப்படும். அமெரிக்காவில் விவசாயத்தில் செலவழிக்கப்படும் உற்பத்திச் செலவினத்தில் ஒரு டாலருக்கு வெறும் 14.6 செண்டுகள்தான் கார்ப்பரேட்டுகள் செலவழிக்கின்றன.( 100 செண்டுகள் கொண்டது ஒரு டாலர்).மீதி 85. 4 செண்டுகள் அமெரிக்க விவசாயிகள் தலையில்தான் சுமத்தப்படுகின்றன.
கேரளம்-கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கூட்டுறவு விவசாயம்
மோடி அரசின் வேளாண் சட்டங்கள் விடுக்கும் சவால்களை சந்திக்க கேரள அரசு அதிகாரப் பரவல்முறை மூலம் மாற்று முன்முயற்சிகளை கண்டறிந்துள்ளது. கேரளாவில் பணப் பயிர் விவசாயம் 90% விளை நிலங்க
ளிலும், உணவு தானிய விவசாயம் 10 சதவிகித விளைநிலங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தேயிலை, காப்பி, தேங்காய், ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் 62 சதவீத நிலங்களில் விளைவிக்கப்படும் நிலையில், முக்கியஉணவான அரிசி உற்பத்தி 7 சதவீத நிலங்களில் மட்டுமேநடக்கிறது. கேரளா ஒரு உணவு பற்றாக்குறை மாநிலமாகும். எனவே கேரள அரசே 13 அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்து மானிய விலையில் மக்களுக்கு பொது வினியோகக் கடைகளின் மூலம் வழங்குகிறது.
உள்ளாட்சி அமைப்புகள், வலிமையான வலைப்பின்னல் அமைப்புக் கொண்ட கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தரிசுநிலங்களில் உணவுப் பயிர்களை பயிரிட்டு உணவுப்பொருட்கள் உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. “கார்ப்பரேட்டுகளை எதிர்த்து கூட்டுறவு அமைப்புகள்” என்பது தைரியமான முன் முயற்சி ஆகும்.இத் திட்ட செயலாக்கத்தின் போது எதிர்கொள்ள உள்ள விரிவுபடுத்தப்பட்ட சந்தை, விளை பொருட்களின் தரம், கண்காணிப்பு போன்ற குறைபாடுகள்-தடைகளை களையவும் திட்டமிடப்பட்டு வருகிறது.உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரள அரசின் மாற்றுக் கொள்கையின் மூலம் விவசாயத்தை வளப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு- பொது விநியோகத் திட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப் பிரச்சனையை காங்கிரஸ்அரசு தவறாக கையாண்டது. பசி பட்டினியை போக்க இடதுசாரி கட்சிகள் தெருவில் இறங்கி போராடின. திமுக உணவு நெருக்கடி பிரச்சனையை அருமையான வாய்ப்பாகப் பயன்படுத்தி உணவுப் பஞ்சத்தை முக்கிய அரசியல் பிரச்சனை ஆக்கியது.1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. மத்திய அரசின் ஒத்துழையாமையை மீறி உணவுப்பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில குடிமை பொருட்கள் வினியோகக் கழகம் உருவாக்கப்பட்டது. ஆடுதுறை 27 போன்ற புதிய வீரியரகநெல் வித்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கிராமப்புறங்கள் மின்மயமாக்கப்பட்டன. விவசாய மின் மோட்டார்கள் வாங்க நீண்ட- குறுகிய காலக் கடனுதவி வழங்கப்பட்டது. இது விவசாயத்தில் பம்புசெட் மோட்டார் புரட்சிக்கு வழிவகுத்தது. கேரளாவைப் போன்று அரசியல் உறுதியுடன் தமிழகத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் அமலாக்கப்பட்டவில்லை என்றாலும் சமரசங்களுடன் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இவையாவும் தமிழக விவசாயத்திற்கு பெரிய உந்து விசையை அளித்தன.அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.1970களில் 500 ஆக இருந்த பொதுவிநியோக கடைகளின் எண்ணிக்கை இன்று 30 ஆயிரமாக விரிவடைந்துள்ளது.90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொதுவிநியோகத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருள்கள் போதாததால், தமிழ்நாடு மாநில அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் 22 பொருள்களை கொள்முதல் செய்கிறது. மாநில அரசு ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்புக்காக 6500 கோடி ரூபாய் வழங்குகிறது.இவற்றிலெல்லாம் குறைபாடுகளும் போதாமைகள் இருந்தாலும், அவைகளை சீர் செய்வதற்குப் பதிலாக மோடி அரசு புதிய வேளாண் சட்டங்கள் மூலம் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றுள்ள 70 ஆண்டுகால பொது வினியோக முறையை அடியோடு தகர்த்தெறிகிறது.புதிய வேளாண் சட்டங்கள் தமிழகத்தின் வேளாண் துறையையும், இங்கு வேரூன்றியுள்ள சமூக நலத் திட்டங்களையும் நாசமாக்கிவிடும். சுதந்திரமான சந்தை என்பதும், குறைந்த பட்ச ஆதார விலை என்பதும் ஒன்றாக பயணம் செய்ய முடியாது. எனவே குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்று மோடி அறிவிப்பது மோசடியானது. தமிழகவிவசாயிகளையும் நுகர்வோர்களையும் பாதுகாக்க வேளாண் விளைபொருட்கள் விற்பனை மார்க்கெட்டுகள், குறைந்த பட்ச ஆதார விலை ஆகிய தமிழக மாநில அரசின்தலையீடுகள் தொடர வேண்டும்.வலிமைமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் லாபம் மட்டுமே. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிறு குறு விவசாயிகளின் நலன் , உணவு பாதுகாப்பு , நுகர்வோர் நலன் குறித்து எந்தவித அக்கறையும் இருக்காது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்கள் குறித்து 2020 அக்டோபர் 23 பிரண்ட் லைன் ஏடு விரிவான பார்வையை அளிக்கிறது. அதில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் சாராம்சத்தை தமிழில் தருகிறார் ம.கதிரேசன்