tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் - 3 எஸ்.ஏ.டாங்கே - என்.ராமகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் - 3

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் தொட்டில் (Cradle of Indian Trade Union Movement) என்று கூறப்படும் பம்பாய் நகரின் தொட்டிலை உருவாக்கியதில் கணிசமான பங்கு எஸ்.ஏ.டாங்கே அவர்களுக்கு உண்டு. சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் தலைவர், பிரபலமான தொழிற்சங்கத் தலைவர், இலக்கியவாதி, எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் சிறந்த பேச்சாளர் என்ற பல்வேறு திறன் படைத்த ஸ்ரீபாத அம்ருத் டாங்கே என்ற எஸ்.ஏ.டாங்கே 1899ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் பிறந்தார். 

அவர் 1919ஆம் ஆண்டு பம்பாய் வில்சன் கல்லூரியில் படிக்க ஆரம்பித்தபோது, அங்கே மராத்தி இலக்கியக் கழகத்தை துவக்கினார். மகாத்மா காந்தி தலைமையிலான தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட டாங்கே அதில் தீவிர பங்குகொண்டார். வெளிநாட்டில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பிரபல காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் இந்தியா திரும்பியபோது அவருக்கு பம்பாயில் பிரபல காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகர் தலைமையில் டாங்கே ஒரு மாபெரும் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார். இதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் அவரை 1920ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேற்றியது. இதே சமயத்தில் டாங்கே பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருந்த ரஷ்யப் புரட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகள், லெனினைப் பற்றிய தகவல்கள், அனைத்தையும் படித்து ‘லெனினுக்கும் காந்திக்கும் உள்ள வித்தியாசம்’ என்று ஒரு சிறு பிரசுரம் எழுதினார். அதில் ஒரு பக்கம் காந்தியின் அணுகுமுறையையும், மறுபக்கம் லெனினின் அணுகுமுறையையும் தான் புரிந்து கொண்ட அளவுக்கு டாங்கே எழுதியிருந்தார். இது அவரை மிகவும் பிரபலமாக்கியது. 

சர்வதேச அளவிலும் இப்பிரசுரம் பற்றி பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக மார்க்சியம்தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்த டாங்கே அதுகுறித்து கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தார். இச்சமயத்தில் என்.என்.ராயும் ரஷ்யாவிலிருந்து அவருடன் தொடர்பு கொண்டார். 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘சோசலிஸ்ட்’ என்ற ஏட்டை டாங்கே வெளியிட்டார். இதன்பின் அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி ரஷ்யாவின் பெட்ரோ கிராடு நகரில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும்படி டாங்கே அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கே செல்ல இயலவில்லை.  இக்காலகட்டத்தில் அவருக்கு சென்னையின் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலருடன் தொடர்பு கிடைத்தது. அவர் உருவாக்கிய தொழிலாளி- விவசாயி கட்சிக்கு டாங்கே ஆதரவளித்தார். 1922ஆம் ஆண்டில் கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சிங்காரவேலரும், டாங்கேயும் சேர்ந்து எம்.என்.ராய் உருவாக்கியிருந்த முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திட்டத்தை அங்கே பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர். 

இந்தியாவில் கம்யூனிஸ கருத்துக்கள் பரவுவதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதைத் தொடர்ந்து முசாபர் அகமது, டாங்கே, சௌகத் உஸ்மாணி, நளினி குப்தா ஆகிய நால்வரையும் கைது செய்து கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கை நடத்தியது. இந்த வழக்கில் டாங்கேக்கு நான்காண்டு கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சீத்தாபூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் பம்பாய் ஆர்தர்ரோடு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். தண்டனை முடிந்து 1927ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி விடுதலையான அவருக்கு சிறை வாயிலில் பிரபல காங்கிரஸ் தலைவர்கள் சரோஜினி நாயுடுவும், சௌகத் அலியும் மற்றும் ஏராளமான தொழிலாளிகளும் பெரும் வரவேற்பு கொடுத்தனர். அதே ஆண்டில் டாங்கே, செவிலியரான இளம் விதவை உஷாதாய் பாவே என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி துவங்கிய ஆறுமாத காலம் நீண்ட பம்பாய் ஜவுளி ஆலை தொழிலாளிகள் மாபெரும் வேலை நிறுத்தத்தை அவர் தலைமை தாங்கி நடத்தினார். இதைத் தொடர்ந்து கிர்ணி காம்கார் சங்கம் (ஜவுளி ஆலைத் தொழிலாளர் சங்கம்) என்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சங்கத்தை டாங்கே உருவாக்கினார். பின்னர் மராத்தி மொழியில் கிராந்தி (புரட்சி) என்ற சோசலிச ஏட்டை தன்னை ஆசிரியராகக் கொண்டு டாங்கே வெளியிட்டார். இந்தியாவின் பிரபல பேச்சாளர்களுள் ஒருவரான டாங்கே இந்தி, மராட்டி மொழிகளில் மிக எளிய முறையில் பம்பாய் தொழிலாளிகளுக்கு வர்க்கப் போராட்டத்தை விவரித்து அவர்களை ஈர்த்தார். இது அவரை பம்பாய் தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பிரபலமான தலைவராக்கியது. பம்பாயில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க இயக்கம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளைக் கொண்டு பலமடைந்து வருவதையும், நீண்ட காலம் நீடித்த வேலைநிறுத்தத்தை நடத்தியதையும் கண்டு கவலை கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இளம் கம்யூனிஸ்ட்டுகள் மீது மீண்டும் ஒரு கடும் தாக்குதலைத் தொடுக்க திட்டமிட்டது. அதுதான் 1929ஆம் ஆண்டின் மீரட் சதிவழக்கு. இதில் டாங்கே, முசாபர் அகமது, பி.சி.ஜோஷி, டாக்டர் ஜி.அதிகாரி, எஸ்.எஸ். மிராஜ்கர் உள்ளிட்டு 31 பேரை கைது செய்து மீரட் என்ற சிறிய நகரில் உள்ள  சிறைச்சாலையில் அடைத்து சதி வழக்கை நடத்தியது. 

இச்சமயத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அக்டோபர் 27ஆம் தேதியன்று மகாத்மா காந்தி மீரட் சிறைச்சாலைக்கு வந்து அங்கிருந்த கம்யூனிஸ்ட்டுகளைச் சந்தித்தார். தான் துவக்கப்போகும் புதிய இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொண்டார். அச்சமயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக டாங்கே எழுந்து ஒரு கேள்வி கேட்டார். 1920ஆம் ஆண்டின் ஒத்துழையாமை இயக்கம் பலமாக நடைபெற்று வரும் போது, சௌரி சௌரா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து நீங்கள் அந்த இயக்கத்தையே நிறுத்தியதுபோல் இப்பொழுதும் ஏதாவது சம்பவம் ஏற்பட்டால் நிறுத்தி விடுவீர்களா? என்று டாங்கே ஒரு கேள்வியைக் கேட்கவும், காந்தி பதில் கூறினார்: ‘அவ்வாறு ஏதாவது சிறு சம்பவம் ஏற்பட்டால் நான் இந்த இயக்கத்தை நிறுத்தி விடமாட்டேன்’ என்று மகாத்மா காந்தி உறுதி கூறினார். அதைக் கேட்ட கம்யூனிஸ்ட்கள் உங்கள் இயக்கத்திற்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு என்று உறுதி கூறினர். இந்த வழக்கு நீண்ட காலம் நடக்கப்போகும் வழக்கு என்று முசாபர் அகமது கூறியதைக் கேட்ட கம்யூனிஸ்ட்டுகள் ஜெர்மனியின் கொலோன் நீதிமன்றத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் அந்த நீதிமன்றத்தைப் பயன்படுத்தி கம்யூனிசப் பிரச்சாரம் செய்ததுபோல இங்கேயும் செய்வது என முடிவு செய்தனர். டாங்கே உள்ளிட்டு பலரும் தனித்தனியாக வாக்குமூலம் கொடுத்தனர். டாங்கே 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் 1932ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை வாக்குமூலம் கொடுத்தார். இதில் உலக நிலைமை, இந்திய அரசியல் நிலைமை, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம், கம்யூனிஸ்ட்டுகளின் லட்சியம் போன்றவற்றை விளக்கி இந்த வாக்குமூலம் கொடுத்தார். அவருடைய வாக்குமூலம் 507 முழு பக்கங்களைக் கொண்ட ஆவணமாக உள்ளது. இறுதியில் 1933ஆம் ஆண்டில் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் அது 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் 1935ஆம் ஆண்டு மே மாதம் விடுதலையாகி வெளிவந்தார். அவருக்கு பம்பாயில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பெரோஸ்பூர் காங்கிரஸ் மாநாட்டில் டாங்கே மிகப் பெரும் காங்கிரஸ் தலைவரான சங்கர் ராவ் தேவ்வை தோற்கடித்து அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராக வெற்றி பெற்றார். 1938ஆம் ஆண்டில் அவர் கிர்னி காம்கார் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதியன்று பம்பாய் போனிக்ஸ் மில்லில் பெரும் வேலைநிறுத்தம் டாங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் தான் முதன் முறையாக முதலாளியை சுற்றி வளைக்கும் போராட்டம் (கேரோ) நடைபெற்றது. இதில் டாங்கே கைது செய்யப்பட்டு அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முதல் கேரோ போராட்டத்தை இந்தியாவில் முதலில் நடத்தியது டாங்கேயே ஆவார்.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி இரண்டாவது உலக யுத்தம் துவங்கியது. இது ஏகாதிபத்திய யுத்தம், இதை எதிர்க்க வேண்டும் என்று தலைமறைவாகச் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதியன்று பம்பாயில் லட்சக்கணக்கான தொழிலாளிகள் பங்கேற்ற மாபெரும் யுத்த - எதிர்ப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில் டாங்கேயின் பங்கு மிகப்பெரியது. இதைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கம் டாங்கேயையும் இதர தலைவர்களையும் கைது செய்து ராஜஸ்தானில் உள்ள தியோலி முகாம் சிறையில் அடைத்தது. அவருடன் பி.டி.ரணதிவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஹர்கிசன் சிங் சுர்ஜித், ராகுல் சாங்கிருத்தியாயன், சென்னை கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. (ஐயங்கார்) போன்ற ஏராளமானோரை அடைத்தது. அங்கிருக்கும் பொழுதுதான் டாங்கே தன் புகழ்பெற்ற நூலான பண்டைக் கால இந்தியா என்ற நூலை எழுத ஆரம்பித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு டாங்கேயும், பி.டி.ரணதிவேயும் ஆஜ்மீர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கே இருவரும் கை ரேகை பதிய மறுத்ததால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1943ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலையாயினர். அவ்வாண்டு மே மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் (ஏஐடியுசி) மாநாட்டில் டாங்கே அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே மே மாதம் 22ஆம் தேதி பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்து இலக்கியமும் மக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அது தனிப்புத்தகமாகவே வந்துள்ளது. 

1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் பம்பாய் ஜவுளித் தொழிலாளர் தொகுதியிலிருந்து பம்பாய் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே அவர் தொழில் தகராறு மசோதா குறித்து ஆற்றிய உரை வரலாற்று பிரசித்தமானது. சிறிது காலத்திற்குப் பிறகு மராத்தி சாகித்ய சம்மேளனம் நடத்திய மாநாட்டிற்கு தலைமையேற்று மராத்தி இலக்கிய வரலாறு என்ற தலைப்பில் பேரூரை நிகழ்த்தினார்.  1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய காங்கிரஸ் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் சார்பு தொழிற்சங்க, விவசாயிகள் சங்க அமைப்புகள் போன்றவற்றையும் தடை செய்தது. ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளைக் கைது செய்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தது. டாங்கேயும் கைது செய்யப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டு காலம் ஆர்தர்ரோடு சிறைச்சாலை, எரவாடா சிறைச்சாலை, புனே மத்திய சிறை மற்றும் நாசிக் மத்திய சிறை போன்றவற்றில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் நடைபெற்ற தடியடிக்கும் ஆளானார். 1950 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை (ஹேபிஎஸ் கார்பஸ் மனுவை) தாக்கல் செய்து விடுதலையானார். அச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைமுறை கொள்கை குறித்து பல்வேறு கருத்தோட்டங்கள் நிலவின. எனவே கட்சியின் மத்தியக்குழு, சோவியத் கட்சித் தலைவர் ஜே.வி.ஸ்டாலினைச் சந்தித்து யோசனை கேட்பதென முடிவு செய்தது. அதன் பொருட்டு எஸ்.ஏ.டாங்கே, அஜய் கோஷ், சி.ராஜேஸ்வரராவ் மற்றும் எம்.பசவபுன்னையா ஆகிய நால்வர் கொண்ட குழுவை மாஸ்கோவிற்கு அனுப்பியது. அவர்கள் ஸ்டாலினை சந்தித்து நாடு திரும்பினர். 

1956ஆம் ஆண்டில் குஜராத்தும், மகாராஷ்டிரமும் ஒன்றாக இருந்த பம்பாய் மாகாணத்தைப் பிரித்து மகாராஷ்டிராவை தனி மாநிலமாக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியும், இதர ஜனநாயக கட்சிகளும் கோரின. இதன் பொருட்டு அக்கட்சிகளும் டாக்டர் அம்பேத்கரும் சேர்ந்து சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி என்ற அமைப்பை உருவாக்கி பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த அமைப்புக்குத் தலைவராக டாங்கே செயல்பட்டார். இப்போராட்டத்தில் ஏராளமான பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். டாங்கே கைது செய்யப்பட்டு எட்டு மாத காலம் சிறையிலடைக்கப்பட்டார். இறுதியில் இந்தப் போராட்டம் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலம் தனியாக அமைக்கப்பட்டது.  1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் டாங்கே பம்பாய் தொகுதி ஒன்றிலிருந்து நாட்டிலேயே மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் தலைவராகவும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் குறித்து மிக அற்புதமான உரைகள் ஆற்றினார். அச்சமயத்தில் இஎம்எஸ் நம்பூதிரிபாத் தலைமையில் செயல்பட்டு வந்த முதல் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பிரதமர் நேருவின் மகள் இந்திராகாந்தி அசுரத் தனமாக செயல்பட்டு வந்தார். கேரளாவிலிருந்த சாதிய மதவாத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அடிக்கடி அங்கே சென்று குழப்பம் ஏற்படுத்தி வந்தார். மக்களவையிலும், வெளியிலும் டாங்கே, இந்திராகாந்தியின் போக்கை கடுமையாக கண்டித்துப் பேசினார். மக்களவையில் 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘கேரள சதி’ என்பது குறித்து டாங்கே ஆவேசமிக்க உரை நிகழ்த்தினார்.  நேருவின் மகள் என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இந்திராகாந்தி ஆவேசமாக அந்த அரசாங்கத்தைத் தாக்கி வருவதை அவர் இரண்டே வரிகளில் அம்பலப்படுத்தினார். ‘அறிவு என்பது பரம்பரையாக வருவது அல்ல’ (wisdom is not hereditary) என்று கிண்டலாகக் கூறி இந்திராகாந்தி விவேகமற்றவர் என்பதை சுட்டிக்காட்டினார். இந்தச் சொற்றொடர் பல காலம் பலரால் மேற்கோள் காட்டப்பட்டது. 

1962ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அஜய்கோஷ் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பான தேசிய கவுன்சில் ஒரு மாற்றத்தைச் செய்தது. புதிதாக தலைவர் என்ற பதவியை டாங்கேவுக்காக உருவாக்கியது. கட்சியின் பொதுச் செயலாளராக இஎம்எஸ் நம்பூதிரிபாத்தைத் தேர்ந்தெடுத்தது. 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தத்துவார்த்த ரீதியில் கருத்து மாறுபாடு ஏற்பட்டு இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. டாங்கே தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டார். ஆனால் 1981ஆம் ஆண்டு அக்கட்சியின் முடிவை மீறியதால் டாங்கே அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழக கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாண சுந்தரம், தேஷ்பாண்டே போன்றோருடன் இணைந்து இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியை (ஐசிபி) உருவாக்கினார். அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  முதல் நோய்வாய்ப்பட்ட டாங்கே பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அச்சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இஎம்எஸ் நம்பூதிரிபாத் அந்த மருத்துவமனைக்குச் சென்று அவர் உடல் நலம் பற்றி விசாரித்தார். நீண்ட சிகிச்சை பலனின்றி 1990 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி டாங்கே காலமானார்.  என்.எம்.ஜோஷி, வி.வி.கிரி, பி.பி.வாடியா மற்றும் சக்கரைச் செட்டியார் போன்ற இந்திய முதல் தலைமுறை தொழிற்சங்கத் தலைவர்கள் பெயருடன் எஸ்.ஏ.டாங்கேயின் பெயரும் நீடித்திருக்கும்.