சென்னை,செப்.25- பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில், ஆந்திர வெங்காயம் கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தியுள்ளார். தற்போதைய விலை உயர்வுக்கு மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பெய்த கனமழை தான் காரணம். ஆனாலும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் மூன்று நாட்களுக்கு மேல் தாங்காததால் அதை இதுவரை கொள்முதல் செய்ததில்லை. தற்போது தட்டுப்பாட்டை சமாளிக்க அந்த வெங்காயத்தைக் கொள்முதல் செய்து கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.