சென்னை, மார்ச் 10- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் கடந்தாண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறாத நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்திருப்பதாக வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என்று உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8ஆம் தேதிக்குள், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.