புதுச்சேரி, ஜூலை 26- இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் ஊழியர்கள் நியமன ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2011ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு அமைப்பின் மூலமாக 720 ஊழியர்கள் மருத்துவமனையில் பல்நோக்கு ஊழியர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பின்பு இந்த ஊழியர்களை மருத்துவமனையின் பல்நோக்கு ஊழியர்களாக (எம்.டி.எஸ்) 31.12.2015ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 3,500, 5,100ம் அதிகபட்சமாக ரூ. 6,500 என்ற விகிதங்களில் கடந்த 8 வருடங்களாக அரசு ஊதியமாக வழங்கி வருவதோடு எவ்வித ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை. கடந்த 4.3.2016 மருத்துவமனையை வழிநடத்தும் குழுவின் ஒப்புதலோடு 360 தொழிலாளர்களுக்கு மட்டும் பல்நோக்கு ஊழியர்கள் என்ற நிரந்தர பணி ஆணை வழங்கப்பட்டு, அதுவும் சில மாதத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நிரந்தவேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தொழிலாளர்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்நிலையில் 16.07.2019 அன்று 50 செவிலியர் 123 வார்டு அட்டெண்டர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இப்பணிகளை செய்துவரும் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு இந்த ஒப்பந்த நியமன அறிவிப்பை உடனே ரத்துசெய்து ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு அவர்களின் தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் இப்பணிகளை வழங்கி அவர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் பணி செய்த அனுபவம் உள்ள ஊழியர்களை நியமனம் செய்வதற்கான கொள்கை முடிவினை புதுச்சேரி அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.