திருப்பூர், ஜூலை 3- இந்தியாவில் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்காகவே ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டுவரப்பட்டது, இது சிறு, குறு விவசாயிகள், சிறு, குறு தொழில் துறையினர், சாமானிய மக்களுக்கு எதிரானதாக உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி ஒரு முழுமையான பொது விவாதம் நடத்தி, மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று பொருளாதார அறிஞர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார். திருப்பூரில் வெள்ளியன்று இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ‘நிதிப் பங்கீட்டில் ஜிஎஸ்டி’ என்ற தலைப்பில் வெங்கடேஷ் ஆத்ரேயா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பில் நடைமுறை மற்றும் சில்லரை விவகாரங்களை பற்றி கவனிப்பதை விட அதன் அடிப்படையை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். முதலில் இது ஒரு மறைமுக வரி விதிப்பு முறை ஆகும். பெரு நிறுவனங்கள் பெரும் முதலாளிகள் அவர்களது சரக்கு உற்பத்தி, பரிவர்த்தனை ஆகியவற்றிற்கு ஏதுவாக இந்த வரி இருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள்.
பல்வேறு தேசிய இனங்கள் இருக்கக்கூடிய நமது நாட்டில் ஒன்றிய அரசின் தற்போதைய இந்த வரி விதிப்பு முறை என்பது நமது விடுதலைப் போராட்ட பாரம்பரியத்திற்கு, அதன் அடிப்படைக்கு எதிரானதாக அமைந்துள்ளது. மேலும் இதை முன்வைப்பவர்களும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் ஆவர். 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார்கள். அத்துடன் ஜிஎஸ்டி வரி விதிப்பையும் கொண்டு வந்தார்கள். இதை ஒட்டுமொத்த நாட்டின் தொழில்துறை, பொருளாதாரத்தில் சிறு,குறு தொழில்கள், சிறு,குறு விவசாயம் ஆகியவற்றுக்கு இடம் கிடையாது, முழுக்க, முழுக்க பெருநிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அவர்களது திட்டத்தின் படி அமல்படுத்தினார்கள் என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள், உலகின் பல நாடுகளுக்கு சமமானவையாகும். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு வரி விதிக்கும் உரிமை இல்லை என்று ஒரு இறுக்கமான வரி விதிப்பு முறையாக ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தினார்கள். உலகில் வேறு எங்குமே இது போல் இல்லை.
ஜிஎஸ்டி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பின் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவை என்பதற்கு வழி திறந்து விட்டுள்ளது. நேரடி வரி விதிப்பில் எப்போதும் ஒன்றிய அரசு தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேசமயம் மறைமுக வரி மூலம் வருவாய் பெறுவதில் மாநிலங்களுக்கு இருக்கும் இடத்தை ஜிஎஸ்டி பறித்து விட்டது. ஜி எஸ் டி கவுன்சில் உள்ளடக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு ஒன்றிய அரசை சார்ந்தவர்கள் உள்ளனர். இன்றைய ஒன்றிய அரசை சாராதவர்கள் தனித்து எதுவும் செய்து விட முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில அடிப்படை மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்திய நாட்டில் அரசுகளுக்கு கிடைக்கும் மொத்த வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 65 சதவீதம் மறைமுக வரி மூலம் மட்டுமே கிடைக்கிறது. கொடுக்கும் திறன் அடிப்படையில் நேர்முக வரி மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. இதற்காக அவர்கள் உருவாக்கும் கதையாடல் என்பது, செல்வத்தை கார்ப்பரேட்டுகள் தான் படைக்கிறார்கள் என்பதாக உள்ளது. ஆனால் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த போது கார்ப்பரேட்டுகள் எங்கே செல்வத்தை உருவாக்கினார்கள்?
எனவே, வரி விதிப்பின் தன்மையை வர்க்க அடிப்படையில் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஊடகங்களும் முற்றிலும் எதிராக சொல்லும் பொழுது, இதைப் பற்றிய உண்மையை மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டி உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஜிஎஸ்டியின் திசைவழி ஒன்றிய அரசின் வருவாயை உயர்த்தி இருக்கிறது, மாநிலங்களின் வரி வருவாய் பங்கிடப்படுவது குறைந்து போய் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டு சதவிகிதம் அதிகரிக்கும் என்று சொன்னார்கள். ஆனால் என்ன நடந்தது? கொரோனாவிற்கு முன்பாகவே பொருளாதார மந்த நிலை இருந்தது, ஜிஎஸ்டி வந்ததற்கு பிறகு ஜிடிபி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்தது. மற்றொரு பக்கம் 2019இல் கொரோனாவுக்கு முன்பே ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பிஸ்கட்டை கூட விற்க முடியவில்லை என்று பெரு நிறுவனங்கள் கூறி இருந்தனர். இதற்கு அடுத்து அரசு என்ன செய்தது தெரியுமா? பல வழிகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வரி சலுகை கொடுத்தனர். அத்துடன் கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் அப்போது அரசு தெரிவித்தது.
இதனால் அரசுக்கு பணம் இல்லாமல் போனது. என்ன செய்தார்கள்? பொதுத்துறை நிறுவனங்களை 2 லட்சம் கோடிக்கு விற்பதற்கு பட்ஜெட் போட்டார்கள். இவை எல்லாவற்றையும் நாம் இணைத்து பார்க்க வேண்டும். ஒரு பக்கம் மறைமுக வரியை ஏற்றி மக்களைத் தாக்குவது, நேர்முக வரியை குறைத்து கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை காட்டுவது, வரி விதிக்கும் மாநில உரிமைகளை பறிப்பது, பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் வரி வருவாய் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுவது என்பதுதான் இன்றைய நிலை. எனவே, ஜிஎஸ்டி பற்றி ஒரு பொது விவாதத்தை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த வரி விதிப்பில் மறுபரிசீலனை செய்யவும், மாற்றம் கொண்டு வரவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேரடி வரிவிதிப்பை அதிகரித்து, மறைமுக வரியை குறைக்க வேண்டும். வரி விதிப்பில் ஒரு நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கண்ணோட்டத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மக்களிடம் பறிப்பது ‘சாதனையா?’
ஜிஎஸ்டி வரியில் ஒரு மாதத்தில் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது என்பதை சாதனையாக சொல்கிறார்கள். இது சாதனையா? சாதாரண மக்களிடம், சிறு, குறு தொழில்கள், சிறு, குறு விவசாயிகளிடம் கடுமையாக வரிவிதித்து வருவாய் ஈட்டுவது கொடுமை இல்லையா? நாட்டில் பெரும் வசதி படைத்த, பெரு முதலாளிகள் 10, 15 பேரிடம் வசூலிக்க வேண்டியதை வசூலிக்காத இந்த அரசின் வர்க்கத் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். எனவே தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பின் மேலிருந்து கீழ் வரை அனைத்து அம்சங்களையும் ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தி உரிய மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.