tamilnadu

img

கொரோனா தடுப்பு: காஞ்சி அதிகார மோதலில் மறைந்திருக்கும் “மர்மங்கள்” - இ.சங்கர்

கடந்த 100 ஆண்டுகளில் மனித குலம் சந்திக்காத இந்த பெரும் தோற்றால் லட்சக் கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும் பகுதி மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பி வருகின்றனர். இங்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் தன்னலமற்ற சேவை மக்களை பாதுகாத்து வருகிறது.

சேவையும்-தியாகமும்...
இந்தப் பேரிடர் காலத்திலும் தனியார் மருத்துவமனை களைக் காட்டிலும், அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளும், உரிய பரிசோதனை கருவிகளும் உள்ளன. இந்த கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி மக்களின் உயிரைக் பாதுகாக்க முன்னின்று செயல்பட வேண்டிய காலமாகும் இது . அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் , செவிலியர்கள், ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருவது போற்றுதலுக்குரியது. இவர்களது தியாகத்தை ஒட்டுமொத்த தமிழகம் என்றென்றும் நினைவு கூற கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு நாடும், மக்களும் கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டுள்ள சூழலில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரியின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களது அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறிப் போவதாக மருத்துவமனை ஊழியர்களே புலம்புகின்றனர்.

விலகாத மர்மம்...
தீக்கதிர் நாளிதழின் காஞ்சிபுரம் நகர செய்தியாளராக பணியாற்றி வந்த தோழர் இ. இராமநாதன், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் நன்மதிப்பை பெற்ற சமூக பொதுநல ஊழியராக திறம்பட செயல்பட்டு வந்தார். 52 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இம்மாதம் 5 ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததை மாவட்ட ஆட்சியருக்கு சுட்டிக் காட்டியதோடு தீக்கதிர் நாளேடு மற்றும் இதர ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ராமநாதனுக்கு காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் உரிய காலத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், திருபெரும்புதூர் அருகே தண்டலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு (சவிதா) மாற்றப்படுகிறார். அங்கு 15 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக வந்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவருக்கு மேல்சிகிச்சை தேவையெனில் அடுத்த மேல் நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தான் அனுப்ப வேண்டும். காலம் கடந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன்? கொரோனா பரிசோதனை செய்து கொண்ட தோழர் ராமநாதனுக்கு தொற்று உள்ளது என்ற தகவல் தெரிவிப்பதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.

நெகட்டி-பாசிடிவ் குளறுபடி
கொரோனா பரிசோதனை முடிவுகளை உரிய காலத்தில் தெரிவிக்காமல் காலதாமதம் செய்வதுடன் பாசிட்டிவ் வந்தவருக்கு நெகட்டிவ் என்றும் நெகட்டிவ் வந்தவருக்கு பாசிட்டிவ் என்றும் மாறி மாறி அறிவிப்பதும் தொற்று உறுதி செய்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் குழப்பமும், குளறுபடிகளும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டின் நிலைமைகள் மிகமிக மோசமாக உள்ளது. கடந்த 4 மாதமாக இந்த வார்டை மருத்துவமனையின் கண்காணிப்பாளர், இணை இயக்குநர் இருவரும் கண்காணிக்கவில்லை என்று நோயாளிகளும் குற்றம் சாட்டுகின்றனர். உயர் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல்களால் நோயாளிகள் அலைகழிக்கப் படுகின்றனர். இதனால் உயிரிழப்பும், நோய்த் தொற்றும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விசாரித்த போது மேலும் அதிர்ச்சியான சம்பவங்கள் வெளியாகின

கூட்டு பேரம்...
காஞ்சிபுரம் தலைமை தபால் நிலைய அதிகாரியாக பணியாற்றி வந்த என். கோபால் நெஞ்சுவலியால் ஜூலை 8 ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். 108 ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யாமல் தனியார் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். வேறு வழியின்றி அழைத்துச் சென்றதால் செங்கல்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிக்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டதால் கோபால் உயிரிழந்தார். 108 ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பிவைத்திருந்தால் முதலுதவி சிகிச்சையுடன் நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார் . மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நோயாளியை பல மணி நேரம் சிகிச்சை அளிக்காமல் அலட்சியப் படுத்தியது மிகக் கொடூரமானதாகும். 108 ஆம்புலன்ஸ் வாகனம் உரிய நேரத்தில் ஏன் வரவில்லை என்பதை ஆராயும் போது மருத்துவமனையில் உள்ள சிலர் தனியார் ஆம்புலன்ஸ்களுடன் கூட்டு சேர்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது அம்பலமானது.

அலட்சியம்...
அதேபோல் காஞ்சிபுரம் வட்டம் , ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பழனி ( 50 ) கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு ஜூலை 10 ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் . பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துவிடுகிறார். அவரது உடல் 16 ஆம் தேதி வரை அடக்கம் செய்யாமல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது . உறவினர்கள் 6 நாட்களாக காத்துகிடந்தனர். உடலை ஏன் அடக்கம் செய்யவில்லை என கேட்டதற்கு காஞ்சிபுரத்தில் இருந்து பரிசோதனை முடிவு வரவில்லை என்று செங்கற்பட்டில் கூறியுள்ளனர். 10 ஆம் தேதி பரிசோதிக்கப்பட்ட ஒருவருக்கு 16 ஆம் தேதி வரைக்கும் பரிசோதனை முடிவை தெளிவுபடுத்தாதது ஏன்? கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள இக்காலத்தில் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த கலைச்செல்வி (46) மே 8 ஆம் தேதி பாம்பு கடித்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். விஷக் கடிக்கு மருந்து இல்லாத நிலையில், பல மணி நேரத்திற்கு பிறகு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 12 ஆம் தேதி மரணமடைந்தார். உரிய நேரத்தில் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என சென்னை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த காலதாமதம் ஏன் ? எதனால் ? என்ற கேள்விகள் எழுகின்றன.

அதிகார மோதல்...
காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, நோயாளிகளின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க தவறிய மருத்துவமனை நிர்வாகிகளை எச்சரித்த மாவட்ட ஆட்சியர் மீது புகார் முதல்வருக்கு மனு அனுப்ப மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் கையெழுத்திடுமாறு மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகள் நிர்பந்தப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கடமையை செய்த மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அரசு மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர்கள் பகிரங்கமாக செயல்பட முடியும் என்றால் சாதாரண மக்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்த சம்பவங்கள் குறித்து முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும், செயலாளரும் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் அதிகார மோதல் முடிவுக்கு வரவேண்டும்.

- இ.சங்கர்
சிபிஎம் மாவட்டச் செயலாளர்