tamilnadu

img

மும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அழைப்பு

புதுதில்லி, ஜுன் 2-மோடி 2 அரசாங்கத்தின் தேசிய வரைவு கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக்கொள்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அதை அரசு திரும்பப்பெறச் செய்திட நிர்ப்பந்திக்கும் விதத்தில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜுன் 2 ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய வரைவு கல்விக்கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த வரைவுக் கொள்கையில், பள்ளிக்கல்வியின் துவக்கநிலையிலிருந்து மும்மொழிக்கொள்கை அமலாக்கப்படும் என்று முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முற்றாக எதிர்க்கிறது.எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் எதிர்ப்பது என்பது இதன் பொருள் அல்ல; மாறாக இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளர்வதற்கும் மேம்படுவதற்கும் வாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கருத்தாகும்.தேசிய வரைவுக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை எனும் - பொருத்தமற்ற, உணர்வுகளை புரிந்துகொள்ளாத திட்டத்திற்கு எதிராக பரவலான முறையில் எதிர்வினைகள், குறிப்பாக தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக்கின்றன. இத்தகைய பலவந்தமான மொழித் திணிப்பு என்பது, நமது மக்களின் ஒற்றுமையையும் நாட்டின் ஒற்றுமையையும் கடுமையாக சீர்குலைக்கும் விதத்திலான மொழிவெறி உணர்ச்சிகளுக்கு மக்கள் இரையாவதை நோக்கி இழுத்துச் செல்லவே வழி செய்யும்.

இந்நிலையில், இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்துள்ள பின்னணியில், மேற்கண்ட கொள்கை அறிக்கையானது ஒரு வரைவு ஆவணம் மட்டுமே என்று மத்திய அரசு விளக்கம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனை மிகவும் கடுமையான உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை என்பதை உணர்ந்து, அரசு தற்போது வெளியிட்டுள்ள வரைவுக்கொள்கையை அவசியம் விலக்கிக் கொள்ள வேண்டும்; இத்தகைய சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்தையும் விலக்கி விட்டு புதிய வரைவுக் கொள்கையை வெளியிட வேண்டும்.இந்தப் பிரச்சனையில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து ஜனநாயக அமைப்புகள், சரியான சிந்தனை கொண்ட குடிமக்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மிகவும் சீர்குலைவான மும்மொழிக் கொள்கை எனும் மத்திய அரசின் முயற்சியை திரும்பப்பெற்றிட நிர்ப்பந்திக்கும் விதத்தில் உரத்து குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்புவிடுக்கிறது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ஐஎன்என்)

அதிமுக அரசு எதிர்க்கத் தயங்குவது ஏன்?

பாஜக அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்மீண்டும் பதவியேற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது. பதவியேற்ற கையோடு புதிய கல்விக்கொள்கை நகலை வெளியிட்டுள்ளனர். இதன் மீது கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விவாதித்து கருத்துக் கூற வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். இந்த கல்விக்  கொள்கையானது இந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கி லம் தெரியாதவர்கள் இந்த நகல்மீது கருத்துச் சொல்ல முடியாது.இந்தியா பன்முகம் கொண்ட நாடு.சாதாரண மக்களைக் கணக்கில் கொள்ளாமல் கல்வி நகலை இரண்டு மொழியில் மட்டுமே வெளியிட்டிருப்பது தேசிய அவமானமாகும். எனவே மத்திய அரசு கல்வி நகலை அனைத்து மொழிகளிலும் வெளியிடவேண்டும்.நகலின் மீது கருத்து சொல்ல ஜூன் 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகல்மீது நாடு முழுவதும் விவாதம் நடத்தி கல்விக் கொள்கை உருவாக்க 6 மாத காலம் என்ற அளவில் கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.இந்தக் கல்விக் கொள்கையில் ஆபத்தான சில கருத்துக்கள் உள்ளன.6ஆம் வகுப்புக்கு மேல் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும். அதேபோல் சமஸ்கிருதம் படிக்க வேண்டும். அதிக அளவில் சமஸ்கிருத நூல்களை இந்திய அளவில் வெளியிட வேண்டும் என்ற கருத்துக்கள் எல்லாம் கல்விக் கொள்கை நகலில் உள்ளது. சமஸ்கிருதம் 100க்கு 100 சதவிகிதம் பேர் இந்தியாவில் பேசுவது இல்லை. பாஜக அரசு இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிக்கிறது.உலகத்திலேயே மூத்தமொழி தமிழ்மொழி. இதை வளர்க்க எந்த நட வடிக்கையும் இல்லை. இந்தியைத் திணிக்கும் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். இதற்கு எதிராக போராடுவோம். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு இந்தி திணிப்பு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்க்கவு மில்லை.5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாகவும் கல்விக் கொள்கையில் உள்ளது. இதனால் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி பாதிக்கப்படும்.

தருமபுரியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...

 

தருமபுரியில் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் பேசினார். உடன் சிபிஎம் 
மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பருதி, 
எம்.ஆறுமுகம், சோ.அர்ச்சுனன், எஸ்.கிரைசா மேரி ஆகியோர்.