பாட்னா, ஜூன் 12 - வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது சிதைந்து வருகிறது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல், அநாதைகளாக தவிக்க விடுகின்றனர். இவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, சிறை தண்டனை வழங்கிட பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படும் என்று அந்த சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.