tamilnadu

img

மூச்சுத் திணறும் முதலாளித்துவம்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஒருநாள் இந்த தேசம் கிளர்ந்தெழும்
அமெரிக்காவின் கனவில் 
ஆழ்ந்து வேரிட்ட கனவு அது.
ஒருநாள் இந்த நாடு 
எல்லா மனிதனும் சமமாக படைக்கப்பட்டான் எனும்
உண்மையை உரத்து நிரூபித்து இந்த நாடு 
சமத்துவ கோட்பாட்டிற்கு ஏற்ப எழுச்சி பெறும் 
- மார்ட்டின் லூதர் கிங் 

‘என்னால் மூச்சு விட முடியவில்லை’
அமெரிக்காவின் மினாபொலிஸ் பகுதியில் ஜார்ஜ் பெர்ரி ப்ளாயிட் என்ற கறுப்பின அமெரிக்கரின் கொடூர மரணத்தை விவரிக்கும் வாசகம் இது. அமெரிக்க காவல்துறை அவரது கழுத்தில் தனது கால் முட்டியால் நெரிப்பது வீடியோவில் பதிவாகி, இணையதளங்களில் பரவலாகியது. அந்த வீடியோ அமெரிக்கா முழுவதும் காட்டுத் தீபோல போராட்டங்கள் பரவிப் படர காரணமாகவும் அமைந்தது. நியூயார்க், பிலடெல்பியா, டல்லாஸ், லாஸ்வில்லே, லாஸ் ஏஞ்சலஸ் என அனைத்து அமெரிக்க மாகாணங்களிலும் போராட்டம் நடக்கிறது. முதலாளித்துவம் தன் முழங்காலைக் கொண்டு அமெரிக்க ஏழை நடுத்தர மக்களின் கழுத்தை நசுக்குகிறது. மக்கள் மூச்சுவிடுவதற்காக போராடுகிறார்கள். மேற்சொன்ன வாசகம் முதலாளித்துவத்தை விவரிக்கும் வாசகமாகவும் கச்சிதமாகவே பொருந்துகிறது.

வெள்ளை மாளிகை முற்றுகை
ஜார்ஜ் பெர்ரி ப்ளாயிட் மீதான காவல்துறையின் அடக்குமுறையும், அதனைத் தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியும் இதுவரை காணாத அளவுக்கு மிகப்பெரியவை. போராட்டக் களத்தில் அனைத்து மக்களும் வேறுபாடில்லாமல் குவிந்திருக்கிறார்கள். இதுவரை 4100 பேரை அரசு கைது செய்திருக்கிறது. கைதாகியிருப்போரில் நியூயார்க் மேயரின் மகளும் அடக்கம்.  1861-65 வரை அமெரிக்காவின் வட மற்றும் தென் பகுதிகளுக்கு நடுவில் நடைபெற்ற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ‘சிவில் வார்’ என அழைக்கப்படுகிறது. இப்போதும் நடக்கும் போராட்டங்களை அதனோடு ஒப்பிடுகிறார்கள். வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை மாளிகை தாக்கப்படும் அளவுக்கு மக்கள் ஆத்திரம் அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, அமெரிக்க தேசத்தின் முதலாளித்துவ அமைப்பை அம்பலமாக்கிவிட்டது. மக்களை அது தோற்கடித்துவிட்டது. இதுவரை அங்கே 1 லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்வது அந்த நாட்டின் உழைப்பாளி மக்களே, அதிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள், லத்தினோ அமெரிக்கர்கள் மற்றும் இதர சிறுபான்மையினத்தவர்களே அதிகம். 21 மாகாணங்களில் நடந்துள்ள மரணங்களில் 50% க்கும் மேல் கறுப்பினத்தவர்கள் ஆவார்கள்.

தன்னெழுச்சி போராட்டங்கள்
இன்று உலகை ஆட்டுவிக்கும் ஏகபோக மூலதனத்தின் அரசு வடிவமாக அமெரிக்கா இருக்கிறது. உலகத்தின் தலைவனாக தன்னை வர்ணித்துக்கொள்கிறது. ஆனால் அதனால் உலக மக்களுக்கும் நன்மை செய்ய முடியவில்லை. சொந்த நாட்டு மக்களையும் காக்க முடியவில்லை. 
அமெரிக்காவில் அதிகரிக்கும் சமூகக் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், சிறு குறுந்தொழில்களின் திவால் மற்றும் ஜனாதிபதி டிரம்ப்பினுடைய நான்காண்டு நடவடிக்கைகள் என அனைத்தும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய சப்பிரைம் நெருக்கடியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு நிகழ்வுகள் அமெரிக்க மக்களின் துயரங்களை அதிகரித்திருக்கின்றன. அந்த கோபங்களின் குவியலாகவே இப்போது நடந்துவரும் தன்னெழுச்சிப் போராட்டங்கள் அமைந்திருக்கின்றன.  சீனா, வடகொரியா, ஹாங்காங், கியூபா என தன் அரசியல் எதிரிகளை நோக்கி போலியான ‘மனித உரிமை மீறல்’ குற்றச்சாட்டை முன்வைக்கும் அமெரிக்கா தன் சொந்த மக்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகிறது. வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடந்துகொண்ட விதத்தில்தான் தனது சொந்த மக்களையும் நடத்தும் என்பது தெளிவாகிறது. அதுதான் அந்த அரசின் வர்க்கத் தன்மை. 

முழுமையான சுதந்திரம்
அட்லாண்டாவின் மேயர் கெய்ஸா லான்ஸ் பாட்டம்ஸ் ஊடகங்களிடம் பேசினார்,“நான் 4 கருப்புக் குழந்தைகளின் தாய். மூத்தவனுக்கு வயது 18 ஆகிறது. ஜார்ஜ் மரணச் செய்தியை பார்த்தபோது ஒரு தாயாக கடும் துயறுற்றேன்” என்று தெரிவித்தார். அவர் அந்த நாட்டின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் தகுதிபெற வாய்ப்பிருக்கும் அரசியல் பிரமுகர் ஆவார். அமெரிக்காவைக் குறித்து மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிடும்போது ‘முழுமையான சுதந்திரம் அமெரிக்காவுக்கு வரவேண்டுமென்றால் கருப்பினத்தோர் மனிதர்களாக நடத்தப்படும்போதுதான் வரும்’ என்றார்.  ஒபாமா அந்த நாட்டின் ஜனாதிபதியாக முடிந்திருக்கிறது. ஆனாலும் மார்க்ஸ் குறிப்பிட்ட ‘முழுமையான சுதந்திரத்தை’ அந்த நாடு பெறவில்லை. 

அமெரிக்க ஊடகங்களின் பிரச்சாரம்
முதலாளித்துவ ஊடகங்கள் தன்னெழுச்சிப் போராட்டங்களை தங்கள் பிரச்சாரத்திற்கு ஏற்ப பயன்படுத்த முயல்கின்றன. அமெரிக்காவில் தற்போது நடந்துவரும் போராட்டங்களை அந்த நாட்டு ஊடகங்கள் எவ்வாறு செய்தியாக்கின என்ற ஆய்வை ‘தி கன்வர்சேசன்’ என்ற இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. மொத்தம் வெளியான 777 செய்திகளில் பெண்கள் போராட்டம் மற்றும் டிரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த செய்திகள் நேர்மறையாகவும், அதே சமயம் இனவாதத்திற்கு எதிரான போராட்டங்களும், சிறுபான்மையினர் போராட்டங்களும் பாகுபாட்டோடும் செய்தியாக்கப்பட்டுள்ளன. தன்னெழுச்சிப் போராட்டங்கள்,முதலாளித்துவ அமைப்பின் மீது மக்களுக்கு உருவாகியிருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகின்றவையாகும்.  கம்யூனிஸ்டுகள் தன்னெழுச்சி குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இவற்றை நிராகரிக்கக் கூடாது. மக்களிடையே எழுந்திருக்கும் கோபத்தை புரிந்துகொண்டு சரியான கோரிக்கைகளை உருவாக்கி வடிவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பினுடைய தோல்வியை அம்பலப்படுத்த வேண்டும். ‘ஒரு சினிமா அரங்கத்தில் நடக்கும் தகறாறு கூட பெரும் எழுச்சியாக மாறலாம்’ என லெனின் குறிப்பிட்டார். தன்னெழுச்சிப் போராட்டங்களைக் குறித்த லெனினின் வழிகாட்டுதலை நாம் சரியாக உள்வாங்க வேண்டும்.

பெருந்தொற்றும் பெரும் துயரும்
அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடாக இருந்தாலும், இந்தியாவைப் போன்ற் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட அமைப்பாக இருந்தாலும், உழைப்பாளி மக்களின் துயரங்களுக்கு தீர்வு இல்லை. பெருந்தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் காலத்தில் அமெரிக்க மக்கள் போராட்டக் களத்தில் குவிந்திருக்கிறார்கள். அடக்குமுறையில் சாவதை விட, போராட்டக் களத்தில் துணிந்து நிற்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.  அரசியல் விடுதலை உண்டு. வாக்கு உண்டு. ஆனால் உரிமைகள் என்பவை வாக்கு செலுத்துவதால் மட்டும் வந்துவிடுகிறவை அல்ல. மெய்யான ஜனநாயகம் என்பது சோசலிசம் மட்டுமே. சோசலிசத்திற்கான அவசியத்தை முன்னெடுக்கும் அவசியம் கடந்த காலங்களை விடவும் கூடுதலாக முன்வந்திருக்கிறது.

பதுங்கிக் கொண்ட ஜனாதிபதி
வெள்ளை மாளிகையை தாக்கும் அளவுக்கு அமெரிக்க போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் பதுங்கு குழிக்குச் சென்று தங்கியதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உழைக்கும் மக்கள் எழுச்சியடைந்தால், முதலாளித்துவ பதுங்கிக் கொள்ளும் என்பதை இதவிடவும் சிறப்பாக எடுத்துச் சொல்ல முடியாது. மூச்சுவிடவும் வழியில்லாமல் களத்திற்கு வந்து போராடும் மக்களை முதலாளித்துவம் ஒடுக்க நினைக்கிறது. தன்னெழுச்சிப் போராட்டங்களின் தன்மை மாறுகிறபோது, முதலாளித்துவ ஒடுக்குமுறைகள் தூள் தூளாகும். அந்த வரலாற்றுக் கட்டம் தவிர்க்க முடியாதது என்பதே மார்க்சியம் காட்டும் உண்மை.