tamilnadu

img

வங்கி இணைப்பு யாருக்காக? - ஜி.ஆனந்தன்,தூத்துக்குடி

வங்கிச் சேவை என்பது அடிப்படையில் தொழில் துறை வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டது. ஒரு நாடு முதலாளித்துவ பாதையில் இருந்தாலும், சோசலிசப் பாதையில் இருந்தாலும், அந்த நாட்டு மூலதனத் திரட்டலில் முக்கியப் பங்காற்றுவது வங்கிகளே. அனைத்து நாடுகளிலும் அது சின்னஞ்சிறிய பொரு ளாதார சக்தியாக இருந்தாலும், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருந்தாலும் அதன் பொருளாதாரத்திற்கு ஏற்ப வங்கிகளின் பெருக்கம் மற்றும் அளவு மாறுபடுகிறது.  சிறிய பொருளாதார நாடாக இருக்கும் போது அங்குள்ள சிறிய வங்கிகளே அதன் மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையாக இருக்கின்றன. உதாரணமாக பூடான் உலகின் 158வது பொருளாதார நாடு. அங்கு மூல தனத் தேவைகளை பாங்க் ஆப் பூடான், பூடான் தேசிய வங்கி மற்றும் டிரக் பி.என்.பி ஆகிய வங்கிகளே கவனித்து வருகின்றன. அவற்றின் மொத்த சொத்து மதிப்பு சில ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதே சமயம் ஒரு நாடு முன்னேறிய ஏகாதிபத்திய நாடாக இருக்கும் போது அதன் மூலதனம் அனைத்து நாடுக ளுக்கும் சென்று வரும் வகையில் இருக்கும் போது அந்த நாட்டு வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளாக இருக்கும். உதார ணமாக, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள வங்கிகள் பன்னாட்டு வங்கிகளாக இருப்பது தேவைப் படுகிறது. ஆகவே அவற்றின் சொத்து, மூலதனம்  ஆகிய வையும் பிரம்மாண்டமாக இருப்பது தேவைப்படுகிறது.  அமெரிக்காவின் 10 பெரிய வங்கிகளில் முதல் 5 வங்கிகளின் சொத்து மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட 10 டிரில்லி யன் டாலர் (டிரில்லியன் -லட்சம் கோடி) என்ற அளவிற்கு உள்ளது.  ஜெர்மனி உலகின் மற்றொரு மிகவும் முன்னேறிய பொருளாதார நாடாகும். இந்த நாட்டின் முதல் 5 வங்கிகளின் சொத்து மதிப்பு மட்டும் 3.215 டிரில்லியன் யூரோவாகும்.  இந்த வங்கிகள் பெரும்பாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறுதியிட்டு சொன்னதைப் போல் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கி விழுங்கி பெரும் கொழுத்த வங்கிகளாக வளர்ந்துள்ளன. இவைகளின் முக்கிய வாடிக்கையாளர்கள் பன்னாட்டு தொழிற்சாலைகள். ஆகவே, அவை எந்த நாட்டிலும் எந்த வளத்தையும் வளைத்துப் போடும் அளவிற்கு மூல தனமும் சொத்து மதிப்பும் கொண்டுள்ளன. இந்த நிலையில் நமது நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பற்றி நாம் அறிந்து கொள்வது தேவையாகும். 

வங்கிகள் தேசிய மயம்

ஜூலை 19, 2019 தேதியோடு  வங்கிகள் தேசியமயமாக் கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1969ல் முதலில் 14 வங்கிகளும் பின்னர் 1980ல் மேலும் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.  வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது அன்றைய இந்திரா காந்தி அரசு முன் வைத்த காரணம் இரண்டு: 

  • பல தனியார் வங்கிகள் அடிக்கடி திவாலாகி நாட்டு மக்களின் சேமிப்புகளை அழித்துக் கொண்டிருந்தன. 
  • முன்னுரிமைத் துறை எனப்படும் முதன்மைத் துறை களான விவசாயக் கடன், சிறு குறு நடுத்தரத் தொழில்க ளுக்கு அன்றைய வங்கிகள் எந்தக் கடனும் வழங்க வில்லை. 1968 வரை வெறும் 2 சதவீதத்திற்கு குறைவாகவே இந்த துறைகளுக்கு கடன் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. l முன்னுரிமைத் துறை எனப்படும் முதன்மைத் துறை களான விவசாயக் கடன், சிறு குறு நடுத்தரத் தொழில்க ளுக்கு அன்றைய வங்கிகள் எந்தக் கடனும் வழங்க வில்லை. 1968 வரை வெறும் 2 சதவீதத்திற்கு குறைவாகவே இந்த துறைகளுக்கு கடன் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

பொதுத்துறைகள் கபளீகரம்

வங்கிகள் தேசியமயத்தால் பெரும் தொழில்கள் தொடங்க பெரும் மூலதனம் பெற்ற பெருமுதலாளிகள் பெரும் வளர்ச்சியை அடைந்தனர். 80களின் இறுதி வரை தனியார் துறை மிகப் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற நிலை யில், 91ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய பொருளா தாரக் கொள்கையில் தனியார்மயம் அமல்படுத்தப்பட்ட நிலையில் நாட்டின் பொதுத்துறைகளை தனியார் துறை கபளீகரம் செய்யத் துவங்கியது.  உலகமயம், தனியார் மயம், தாராளமயம் அறிமுகப் படுத்தப்பட்டபின் தனியார் துறை  அரசின் உதவியோடு மிக மிக பிரம்மாண்ட அளவில் வளரத் தொடங்கின. அவற்றின் வளர்ச்சியில் நாட்டின் பொதுத்துறை வங்கிகளே மிகப் பெரும் பங்காற்றின. 

தேசிய மயமாக்கப்பட்ட போது சொல்லப்பட்ட முன்னுரி மைத்துறை எனப்படும் விவசாயம், மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு மீண்டும் 91 முதல் வங்கிகள் கடன் வழங்குவதை பெரும் அளவில் குறைத்தன அல்லது நிறுத்தின. இதன் காரணமாக கிராமப்புற பொருளாதாரம் சீர்குலைந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.  இந்திய அளவில் பெரும் நிறுவனங்களாக இருந்தவை இந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாகின. வேதாந்தா நிறுவனம், உலகம் முழுவதும் சுரங்கங்களை வாங்கி குவித்தது. டாடா நிறுவனம் ஜாகுவார் நிறுவனத்தை கைப் பற்றியது. மிட்டல், ஆர்சிலர் உருக்கு ஆலையை கைப்பற்றினார்.  இதற்கிடையில் இந்திய அளவில் பெரும் நிறுவனங்கள் உற்பத்தி துறையிலும், சேவைத்துறையிலும் வளர்ச்சி பெற்றன. அவை பெற்ற வளர்ச்சி வங்கிகள் பணத்திலிருந்து தான்.அவை மூடப்பட்டாலும் வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. 

விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றோர் வங்கி கடனை தராமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிலை யில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ் 59000கோடி ரூபாய் கடனை அடைக்காமல் திவாலானது. நாடு முழுவதும் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வராக்கடன் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்பட்டுள்ளது.  இதனால், அடுத்த கட்டமாக வங்கிகள் திவாலாகக் கூடிய நிலையில் உள்ளன. இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா-வோடோபோன் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட வளர்ச்சியால் மிகப் பெரிய அளவில் விரிவாக்கத்திற்கு நிதி தேவை ஏற்படுகிறது. மின் துறையில் தனியார்  துறைக்கு வழங்கிய கடன்கள் அதானி மின் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளது. அவற்றின் கடன்கள் வராக் கடன்களாக உள்ளன.  இந்த நிலையில் இந்தியாவின் பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவில் பிரம்மாண்ட மான வங்கிகள் தேவைப்படுகின்றன. அதே சமயம் அவற்றின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் அவற்றில் புதிய முதலீடுகளை பாய்ச்சி அவற்றின் நிலையை மேம்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபங்களை உறுதி செய்ய வேண்டியுள்ளது. 

கடன் தராத நிலை நீடிக்கும்

இந்த பின்னணியில்தான் வங்கிகள் இணைப்பும், ரிசர்வ் வங்கியின் கையிருப்புகள் சுரண்டி எடுப்பதும் நடை பெற்றது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை குறைப்பது முதல் கட்ட நடவடிக்கை.  பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கி, யுனைடட் வங்கி ஆகியவற்றை இணைத்த பின் அவற்றின் மொத்த வர்த்தகம் 18 லட்சம் கோடியாக இருக்கும். கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியின் மொத்த வர்த்தகம் 15லட்சம் கோடியாக இருக்கும். யூனியன் பேங்க், ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் வங்கியின் மொத்த வர்த்தகம் கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி.

இதன் மூலம் வங்கிகளின் சொத்து மிக மிக அதிகமாகும். அதே சமயம் வராக்கடனும் அதிகரிக்கும். ஆகவே, வங்கிகளை இணைத்து பிரம்மாண்ட வங்கிகளாக மாற்றினாலும், அவற்றால் பெரும் அளவில் கடன் தர இயலாத நிலை நீடிக்கும்.  அதனை சரி செய்ய, புத்தம் புதிதாக வங்கிகளில் மூலதனத்தை பாய்ச்ச வேண்டும். பட்ஜெட்டிலேயே ரூ.70,000 கோடி வங்கிகளில் மறு முதலீடு செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது.  ஏற்கனவே, பட்ஜெட்டில், நிதி பற்றாக்குறை அறி விக்கப்பட்டதை விட அதிகம். இப்பொழுது பொருளாதார மந்தம் வேறு. ஏற்கனவே எதிர்பார்த்த வரவு இருக்காது. இவற்றிற்கெல்லாம் அனைத்தும் நார்மலாக இருந்தாலே பணம் இல்லாத நிலை. ஆகவே, நிதி திரட்டலுக்கு வழி இல்லை. 

இவற்றை சமாளிக்கவே தற்போது அரசு ரிசர்வ் வங்கியி லிருந்து நிதியை சுரண்டியுள்ளது. அதில் வங்கிகளில் மறு மூலதனம் பெரும் அளவில் செய்யப்படும். வங்கிகள் செழிப்பாக இருப்பதன் காரணமாக ஏற்கனவே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தாத கடன்கள் மாற்றிய மைக்கப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பிரம்மாண்ட கடன்கள் வழங்கப்படும்.  அந்த நிதியைக் கொண்டு பொதுத்துறை நிறுவ னங்கள், ரயில்வே உட்பட அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மலிவாக வாங்கிப் போடலாம். பின்னர், கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் வங்கிகள் நிலைமை மோசமாகும் போது, அவற்றையும் சேர்த்து கபளீகரம் செய்யும் திட்டமே வங்கிகள் இணைப்பு.

நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரை

வங்கிகள் இணைப்பு என்பது ஏதோ மோடி அரசின் திட்டம் என யாரும் எண்ணி விட வேண்டாம். 90 களின் பிற்பகுதிகளில், வங்கி சீரமைப்பு என்பதற்கு நரசிம்மம் கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து வங்கி தொழிற்சங்கங்க ளும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடியது நினைவு க்கு வருகிறதா? அந்த நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரை தான் வங்கிகள் இணைப்பு.  அதன் பிறகு வந்த பல அரசுகளுக்கு மெஜாரிட்டி பிரச்சனை போன்றவைகள் இருந்ததால் தொழிற்சங் கங்களின் கடும் எதிர்ப்பால் அவை திரும்பப் பெறப்பட்டன. தற்போது, காஷ்மீர் 370ஆவது பிரிவு ரத்து போன்ற நடவடிக் கைகளால், தனக்கு சாதகமான நிலை, நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி தனது முரட்டு பலத்தின் மூலமாக எதை வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலையில் பாஜக அரசு இந்த முடிவை தற்போது அமல்படுத்தியுள்ளது. 

வங்கிகள் இணைக்கப்படும் போது, பல வங்கிக் கிளை கள் மூடப்படும், பலர் வேலையிழப்பர், விவசாய மற்றும் சிறு குறு தொழில்கள் கைவிடப்படும் போன்ற நிலைமை களும் ஏற்படும்.