tamilnadu

img

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் பன்மொழி வித்தகர் ராகுல் சாங்கிருத்யாயன்- எஸ்.ஏ.பெருமாள்

தத்துவங்கள், வரலாறு, நாவல்கள், சிறுகதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், பயண நூல்கள், மதங்கள், அகராதிகள், நாட்டார் பாடல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என 60 ஆயிரம் பக்கங்கள் எழுதி குவித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராக, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக வாழ்ந்து மறைந்த மகா பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன். அவர் 34 மொழிகள் கற்றவர்.   1893ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அஜம்கார் மாவட்டத்தில் பாந்தகா என்னும் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது பூர்வீகப் பெயர் கேதார்நாத் பாண்டே. அவர் காசியில் சமஸ்கிருதம், அரபு, பெர்சிய மொழிகளில் கற்றார்.  இதர 30 மொழிகளையும் தானாகவே கற்றுக் கொண்டார். சிறுவனாக இருந்த பொழுதே வேலையையும், அறிவையும் தேடி அவர் வீட்டை விட்டு ஓடிப் போனார். சனாதன இந்து மத நம்பிக்கையை விடுத்து ஆரிய சமாஜத்தில் சேர்ந்தார். ஆரிய சமாஜத்தின் வேதக் கொள்கை பிடிக்காமல் மஞ்சள் ஆடை தரித்து புத்த பிக்கு ஆனார். இதற்கென நேபாளத்திலும், ஸ்ரீலங்காவிலும் சுற்றி புத்தமத நூல்களைப் படித்தார். பாலி, சிங்களம், திபெத் மொழிகளைக் கற்று புத்தமத புனித நூல்களை வாசித்தார். புத்த பிக்குவாக அவர் ஐரோப்பாவுக்கு பயணம் போனார். அங்கு இந்திய இயல் அறிஞர்களை சந்தித்தார். அவர்கள் அங்கேயே தங்கும்படி ராகுலை வேண்டினர். அமெரிக்காவுக்கும் புத்தமத பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டார். இரண்டையும் நிராகரித்தார்.  இந்தக் கட்டத்தில் மார்க்சியம் அவரை வெகுவாக கவர்ந்தது.

1935ல் முதன் முறையாக சோவியத் ரஷ்யா சென்று வந்ததும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் அரசியல் வாதியானார். 1948 ஜனவரியில் பம்பாயில் சாகித்ய சம்மேளன மாநாட்டில் அவர் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் சதா அறிவின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு வகையான நம்பிக்கையிலிருந்து இன்னொரு வகைக்கென்று சஞ்சாரம் செய்து வந்தார். மனிதகுலத்தை துன்ப துயரங்களிலிருந்து மீட்கும் வழியை தேடி திரியும் அமைதியற்ற மனிதராகவே அவர் இருந்தார்.  11 ஆண்டுகள் அவர் இந்தியா முழுவதும் சுற்றினார். இமய மலைக்கு, திபெத்துக்கு தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றார். தென்னிந்தியாவில் திருப்பதி, விஜயநகரம், காஞ்சிபுரம், மதுரை, இராமேஸ்வரம் எல்லாம் சுற்றினார். அவர் தமிழையும் படித்து காஞ்சிபுரத்தில் ஏழுமாதக் காலம் தங்கி அங்கிருந்த பௌத்த சுவடிகளை ஆய்வு செய்தார். அவர் ஸ்ரீலங்காவுக்கு சென்றபோது, தனது பெயரை ராகுல் சாங்கிருத்யாயன் என்று மாற்றிக் கொண்டார். அதுவே கடைசி வரை நிலைத்து விட்டது. 1932ல் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி மக்களின் வாழ்வை நேரில் கண்டு ஆய்வு செய்தார். சிறிது காலம் சோவியத் ரஷ்யாவில் லெனின் கிராடு பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருந்தார்.  மத்திய ஆசியாவை பற்றி ஒரு விசேஷ ஆய்வு நடத்தி பெரிய நூலை இயற்றினார். அந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ஜப்பான், கொரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளிலும் அவர் புத்தமத ஆய்வுகளை நடத்தினார். சிறு வயதில் அவர் படித்த ஒரு உருது கதையில் வரும் வாசகங்கள் பெரிதும் கவர்ந்தன. 

“ஓ அறிவிலிகான், 
சோம்பேறிகளே புறப்படுங்கள்,
பரந்த உலகம் முழுவதும்
சுற்றி வாருங்கள்,
இதற்காக உங்களுக்கு இன்னொரு 
வாழ்வு கிடைக்கப்போவதில்லை
நீங்கள் நெடுநாள்
வாழ்ந்தாலும் கூட.”
இந்த இளமை உங்களுக்கு 
மீண்டும் வரப்போவதில்லை....

“எதுவும் நிலையானது அல்ல; அனைத்தும அநித்தியமானதே ‘ஸப்பம் காணிகம்’ என்று புத்தர் சொல்லியிருக்கிறார், ‘எதுவும் முடிவானது இல்லை’ என்று லெனினும் கூறியுள்ளார். எந்த மனிதனும் பூரணமாக இருப்பான் என்று நான் நம்பவில்லை. மனிதனும் பூரணமாக இருப்பான் என்று நான் நம்பவில்லை. என்னிலானவை நான் செய்கிறேன். வரும் தலைமுறையினர் என்னைவிட முன்னேறிச் செயல் புரியட்டும்...” என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது. 

ராகுல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பேசினார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவர் பாடல்கள், நாடகம் எழுதுவதிலும் குரானை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பதிலும் செயல்பட்டார். பின்பு காந்தியிடமிருந்து விலகி ராகுல் கம்யூனிசத்திலும் புரட்சிக் கொள்கையின் பக்கம் வந்தார். அவரிடமிருந்த மதப்பற்று, கடவுள் நம்பிக்கை எல்லாம் போய் நாத்திகராக மாறினார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று இரண்டாண்டுகள் பங்கிப்பூர், ஹசாரிபார்க் ஆகிய சிறைகளில் இரண்டு ஆண்டுகள் தனிக் கொட்டடியில் கடுங் காவல் தண்டனையை அனுபவித்தார். சிறையில் நான்கு ஆங்கில நாவல்களையும், பிரெஞ்சு கதைகளையும் இந்தியில் மொழி பெயர்த்தார். நலந்தா, விக்கிரமஷிலா பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டபோது புத்தபிக்குகள் அங்கிருந்த ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு நேபாளம், அசாம், திபெத் ஆகிய இடங்களுக்கு தப்பி ஓடினர். அநேக நூல் நிலையங்களும், மடங்களும் அழிக்கப்பட்டு தீயிடப்பட்டன. எனவே பண்டைய நூல்கள் அதிகமாக திபெத்திற்கு போய்ச் சேர்ந்தன. அவைகளை தேடி ராகுல் நான்கு முறை திபெத் சென்று வந்தார். பல நூல்களை பிரதி எடுத்தும் கொண்டு வந்தார். அவர் ஏராளமாக படித்ததினால் நிறைய எழுதினார். வரலாற்று ஆதாரங்களுடன் கற்பனை படைப்புகளாக 13 புத்தகங்களை எழுதினார். வால்காவிலிருந்து கங்கை வரை சிந்து முதல் கங்கை வரை ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் பொதுவுடைமைதான் என்ன? போன்ற நூல்கள் தமிழிலும் வெளி வந்துள்ளன. தோழர் ஏ.ஜி.எத்திராஜூலு ராகுலின் நூல்கள் சிலவற்றை தமிழில் அளித்துள்ளார்.