அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கு, 2019-ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல் (Philosophy) படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தத்துவவியல் படிப்பு என்னும் பிரிவின்கீழ் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவர்கள் மத்தியில் மதவாத கருத்துக்களை திணிக்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும், அதற்கு பதில் மதம் சாராத பாடப் படிப்பை கொண்டு வரவேண்டும் என மாணவர்கள் கோரி வருகின்றனர்.