tamilnadu

img

மூத்தோர் ஆசிய தடகளப் போட்டி பட்டுக்கோட்டை ஆசிரியை சாதனை

தஞ்சாவூர் டிச.10- மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.திலகவதி (72), ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை. இவரது கணவர் செல்வராஜ் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்த விட்டார். இவருக்கு சுஜாதா, அஜித்தா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2006ல் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். விளையாட்டின் மீது ஆர்வத்தின் காரணமாக, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதங்களை பெற்றுள்ளார்.

மலேசியா நாட்டில் மூத்தோர்களுக்கான 21-ஆவது ஆசிய தடகளப்போட்டி டிச.2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், 80 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றுள்ளார். இது குறித்து திலகவதி கூறியதாவது: விளையாட்டு மீது எனக்கு அதிகப்படியான ஆசை. பள்ளியில் படிக்கும் போது மாநில அளவிலான போட்டியில் நீளம் தாண்டுதலில் பல வெற்றிகளை பெற்றுள்ளேன். படிக்கும் போதே, கடந்த 1965 ல் தேசிய அளவில் பட்னாவில் 100, 200 மீட்டர்களில் கலந்து கொண்டு பதங்களை வென்றுள்ளேன்.  தொடர்ந்து விளையாட்டின் மீது ஆர்வம் இருந்ததால், பணி ஓய்வு பெற்றும் மூத்தோர்களுக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தற்போது, மலேசியாவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் இந்தியாவிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல பிரிவுகளில் விளையாடினோம். இதில் நான் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 80, 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.