tamilnadu

தனியார் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதன்கிழமை இரவு திருச்சிக்கு தனியார் பேருந்து புறப்பட்டது. இதில் பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்த பேருந்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் வல்லத்துக்கு டிக்கெட் எடுத்தனர். வல்லம் அருகே சென்ற தனியார் பேருந்து ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் சென்றது. இதனால் அந்த 5 பயணிகளையும் வல்லத்துக்கு முன்பாக உள்ள மின் நகரிலேயே இறக்கி விட்டுள்ளனர். அந்த 5 பயணிகளும் இரவு நேரத்தில் அங்கிருந்து 1 கிமீட்டர் தூரம் நடந்து சென்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அதே தனியார் பேருந்து தஞ்சாவூர் நோக்கி வல்லம் ஊருக்குள் வந்து, பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது பொதுமக்கள் இரவு நேரத்தில் பயணிகளை புறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டுச் சென்றதால் ஆத்திரம டைந்து அந்த தனியார் பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் தனியார் பேருந்து அங்கிருந்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் போக்குவரத்து வட்டார அலுவலர் கார்த்திகேயன் கூறிய தாவது: தஞ்சாவூரிலிருந்து  திருச்சி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வல்லம்  பேருந்து நிலையத்துக்கு சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இதுபோன்று நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றால் அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

;