தஞ்சாவூர், ஆக.28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யை அடுத்த பின்னவாசல் பெரிய ஏரியை தூர்வாராமலேயே, தூர் வாரியதாக கணக்கு காட்டி ரூ.40 லட்சம் பணத்தை மோசடி செய்து, கையாடல் செய்வதற்கு துணை போகும், பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்னவாசல் கிராம விவசாய சங்கம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில், பேராவூரணி பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் நிர்வாகி எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ். வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் கிளைச் செயலாளர் உ.திருவேங்கடம், ஒன்றியக்குழு உறுப்பினர் சி.ஆர்.சிதம்பரம், நிர்வாகிகள் உள்ளிட்ட கிராம இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். "153 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பின்னவாசல் பெரிய ஏரி மூலம் 174 ஹெக்டேர் 12.50 ஏர்ஸ் விவசாய நிலம் பயன்பாட்டில் உள்ளது. இதில் 700 பட்டாதாரர்கள் பாசன பயன்பாடு அடைந்து வருகின்றனர். இந்த ஏரியை மராமத்து செய்ய அரசு ஒதுக்கிய ரூ.40 லட்சத்தை, கிராம மக்களையோ, பாசனதாரர்களையோ கலந்தாலோசிக்காமல், தனிப்பட்ட நபர்கள் முறைகேடாக பெற்று மோசடி செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னா உடந்தையாக செயல்படுகிறார். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடிக்கு துணை போகும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முதன்மைச் சாலையில் சுமார் 30 நிமிடம் சாலை மறியல் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 65-க்கும் மேற்பட்டவர்களை சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் வீர.அண்ணாதுரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.