tamilnadu

img

அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.18-  ‘இந்தியாவின் ஒரே மொழி இந்தி’ என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி தான் இந்தியாவின் ஒரே மொழி, உலக அரங்கின் அடையாளம், அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று பேசியிருப்பது இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கின்ற செயலாகும். இந்தி கற்றுக் கொள்ளாமல் பல்வேறு மொழிகளில் பயின்றவர்கள் உலக அரங்கில் பல்வேறு துறைகளில் வல்லுநர்களாக உலகை திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் அனைவருக்கும் பொதுவான, பொறுப்பான ஒரு உள்துறை அமைச்சர் பல்வேறு மாநிலங்களில் கலவரங்களை தூண்டக்கூடிய வகையிலும், இந்தியாவை பிளவுப்படுத்தக்கூடிய வகையிலும், ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் பேசியிருப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக புதன்கிழமை காலை, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், மாநகரச் செயலாளர் ந.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் பா.அருண்சோரி, மாநகர செயலாளர் ஆலம்கான், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, தமிழ் தேசிய பேரியக்க மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தலைமை குழு உறுப்பினர் பழ. இராஜேந்திரன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் இராவணன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ச.சிமியோன் சேவியர் ராஜ், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம் மற்றும் தொழிற்சங்க, விவசாய சங்க பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.