tamilnadu

தேசிய மருத்துவர் தின விழா

தஞ்சாவூர், ஜூலை 1- இந்தியாவில் மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்த, பிரபல மருத்துவர் பிதன் சந்திர ராயின் நினைவாக அவரது பிறந்த, மறைந்த தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தினங்களில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இதையொட்டி பேராவூரணி பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவர் பாஸ்கர், மருத்துவர்கள் பிரசன்னா வெங்கடேசன், செந்தில் குமார், காமேஸ்வரி, சிந்தியா  ஆகியோருக்கு நகர வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மருத்துவர் தின விழா நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மருத்துவர்கள், ஆய்வக நுட்புநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், போக்குவரத்து காவல் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சமூக சேவையாளர், போன்றோருக்கு சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு விருதுகளை வழங்கினார்.