தஞ்சாவூர், ஆக.11- ஆக.20 முதல் 26 வரை தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம், இணைய வழியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பங்கேற்று கட்சியின் முடிவுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில், ஆக.20 முதல் ஆக.26 வரை பெரும் மக்கள் இயக்கத்தை நடத்திட மத்தியக்குழு விடுத்துள்ள அறைகூவலை ஏற்று, தஞ்சை மாவட்டத்தில் ஆக. 20-23 தேதிகளில், வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, ஆக.25, 26 தேதிகளில் அனைத்து கிளைப் பகுதிகளிலும் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வது, ஆர்ப்பாட்டத்தை அதிக இடங்களில் நடத்துவது, கூடுதலான அளவில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். கட்சி இடைக்குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வீடுகள் வரை சென்று மக்களை சந்திப்பது எனவும், ஆக. 11 முதல் 20 வரை கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி தோழர்கள், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து உரையாடுவது. ஆக.14 அன்று, ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என்ற அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிப்பது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.