தஞ்சையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், 6 மணிநேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காட்டை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி ஷீலா (29) குத்துச்சண்டை மற்றும் சிலம்ப பயிற்சியாளராக உள்ளார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஷீலா, மகளிர் தினத்தை முன்னிட்டு, அணைக்காடு சிலம்ப கூடம் சார்பில், நேற்று காலை 6:45 மணி முதல் மதியம் 1:35 மணி வரை என சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து, ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பத்தை இடைவிடாமல் சுற்றி சாதனை படைத்துள்ளார். மேலும் தனியார் அமைப்பான நோபல் சாதனை நிறுவனம் மூலம் அவருக்கு சாதனை விருதும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஷீலாதாஸ் கூறுகையில், நான் 7 வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டதால் சிலம்பம், குத்துச்சண்டை கற்றுக்கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். பவர் லிப்ட், வெயிட் லிப்ட் மற்றும் தடகளம், குத்து சண்டை, கராத்தேயில் கருப்பு பட்டை என 13 விருதுகளை பெற்றுள்ளேன். பவர் லிப்ட்டில் தேசிய அளவில் சாதனை நிகழ்த்தி இரும்பு பெண் என்று பட்டமும் பெற்றுள்ளேன். தேசிய அளவில் குத்துச்சண்டையில் நடுவராக பணியாற்ற கூடிய தேர்விலும், சிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
நான் கர்ப்பிணி என்பதால் மருத்துவர்களின் முழு ஆலோசனை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தினேன். உடல் ஒத்துழைப்பு என்பதை தாண்டி மன தைரியத்தில் தான் இது முடிந்தது என்றார்.