கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ரோஜர் பெடரரை (சுவிஸ்), தரவரிசையில் இல்லாத இந்திய வீரர் சுமித் நாகல் (22) எதிர்கொண்டார். கத்துக்குட்டி வீரரான சுமித் நாகல் நம்மை என்ன செய்யப்போகிறார் என ரோஜர் பெடரர் நினைக்க, “ரோஜர் பெடரர் உலக சாம்பியன் அந்தஸ்தில் இருந்தால் நமக்கென்ன அவரை ஒரு கை பார்ப்போம்” என்ற அதிரடி மனப்போக்குடன் விளையாடிய சுமித் நாகல் முதல் சேட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பின்னர் சுதாரித்து விளையாடிய பெடரர் அடுத்த மூன்று செட்களை 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். வெற்றி பெற்றது ரோஜர் பெடரராக இருந்தாலும் ரசிகர்களின் மனதை வென்றது சுமித் நாகல் தான். வெற்றிப்புள்ளிகளை எடுக்கமுடியாவிட்டாலும் பெடரரின் வெற்றிக்கு சுமித் நாகல் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்தார். சொல்லப்போனால் சுமித் நாகலை சமாளிக்கக் கள வியூகம் அமைத்து வெற்றி பெறும் நிலைக்கு பெடரர் தள்ளப்பட்டார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெடரருக்கு எதிராக செட் புள்ளியை கைப்பற்றும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார். ரோஜர் பெடரர் இதுவரை எந்த இந்தியரிடமும் செட்டை இழந்ததில்லை. “விளையாட்டு உலகில் தோல்வி அனைவருக்கும் கிடைப்பது தான். ஆனால் அந்த தோல்வியை எப்படிப் பெறுகிறோம் என்பது தான் முக்கியம்” என்பதைத் தனது செயல் மூலம் சுமித் நாகல் மேற்கோள்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.