இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என இந்திய வீரர்கள் அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ததால், இந்தியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டது பாகிஸ்தான்.
டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய டென்னிஸ் சங்கம் என்ன சொல்கிறதோ, அதை பின்பற்றுவோம் என பாகிஸ்தான் நாட்டு டென்னிஸ் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்திய டென்னிஸ் சங்கம் மீண்டும் பாதுகாப்பு குறித்து ஆராய்வோம் என்று கூறியது. இதை அடுத்து, இந்திய அணி கேப்டன் மகேஷ் பூபதி, போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளா். சில வீரர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.