tamilnadu

img

சேலம்: திருநங்கையாக மாறியதால் கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர்!

சேலம், ஆக.20- திருநங்கையாக மாறியதால் கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட திருநங்கை உட்பட பலர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சோழதரம் பகுதியைச் சேர்ந்தவர் வராகி. இவர் திருநங்கையாக மாறியதற்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய வராகி, சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் தனியாகச் சுற்றித்திரிந்தார். இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் அவரை மீட்டு அடைக்கலம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், செவ்வாய்பேட்டையில் வராகி இருப்பதையறிந்த பெற்றோர், செவ்வாய்பேட்டை பகுதிக்கு வந்து சக திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வராகியை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு வராகி மறுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வராகியின் பெற்றோர் தனது மகனைத் தங்களுடன் அனுப்பி வைப்பதற்கு செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் திருநங்கை வாராகி தொடர்ந்து பெற்றோருடன் போக மறுப்பு தெரிவித்ததுடன், செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள திருநங்கைகளுடன் வாழ விருப்பம் தெரிவித்தார். விசாரணை முடிவில் காவல்துறையினர், திருநங்கை வராகியை தொந்தரவு செய்ய வேண்டாம் என பெற்றோரை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வராகியின் பெற்றோர் ரவுடிகளை வைத்து திருநங்கைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையத்தில் திருநங்கைகள் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த திருநங்கைகள் இன்று (ஆக.20) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலம் நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், திருநங்கைகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.